tamilnadu

img

பொலிவியா ஜனாதிபதி தேர்தல் இவோ மொரேல்ஸ் வெற்றிமுகம்

சான்டா குருஸ், அக். 18- பொலிவியாவில் அக்டோபர் 20 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான இவோ மொரேல்ஸ் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சான்டா குருஸ் நகரில் நடைபெற்ற அவரது பிரச்சார நிறைவுப் பேரணியில் ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர்.

தனது பிரச்சாரம் பற்றிக் குறிப்பிட்ட மொரேல்ஸ், “இந்தப் பேரணியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். வன்முறையை விரும்புபவர்கள் ஜனநாயகத்தின் விரோதிகளாவர். சகிப்புத் தன்மையற்றவர்களை மக்கள் நிராகரிக்கிறார்கள். 13 ஆண்டுகளுக்கு முன்பாக இதே போன்ற பிரச்சார நாளொன்றில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம் உள்ள நாடுகளில் பொலிவியாவும் ஒன்று என்று குறிப்பிட்டனர். தற்போது இந்தக் கண்டத்திலேயே சிறந்த நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது” என்றார். நாட்டில் சுரண்டல் பற்றிப் பேசிய அவர், “நவீன தாராளமயக் கொள்கைகளால் நமது இயற்கை வளங்கள் தாரை வார்க்கப்பட்டன. அது நம் மக்களை பட்டினியில் தள்ளியது. அதுதான் வலதுசாரி அரசியல்வாதிகளின் மனநிலையாகும். தற்போது அவர்கள் மக்களிடம் மீண்டும் வாக்களியுங்கள் என்று கேட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

2006 ஆம் ஆண்டில் மொரேல்ஸ் பதவியேற்றபோது இருந்ததை விடமூன்று மடங்கு அதிகமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வறுமையும், பட்டினியும் பெருமளவு குறைந்துள்ளது. வருங்காலத்தை மனதில் கொண்டு மின்சாரத்தில் ஓடும் வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அரசே துவக்கியுள்ளது. இந்தக் காரணங்களால் மொரேல்ஸ் மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கூறியிருக்கிறது. மொரேல்ஸ் முன்னிலை கருத்துக் கணிப்புகளில் மொரேல்சுக்கு 42.7 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், அவருக்கு அடுத்தபடியாக கார்லோஸ் மாசாவுக்கு 21.3 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பொலிவியாவின் சட்டப்படி, இரண்டாவது சுற்றிற்கு செல்லாமல் முதல் சுற்றிலேயே வெற்றி பெற 50 சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும் அல்லது 40 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றதோடு, இரண்டாவது இடத்திற்கு வருபவரை விட 10 சதவிகித வாக்குகள் அதிகம் பெற்றிருக்க வேண்டும். தற்போதுள்ள நிலவரப்படி, முதல் சுற்றில் மொரேல்ஸ் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

2006 ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதியாக இருக்கும் இவோ மொரேல்ஸ், தற்போது வெற்றி பெற்றால் நான்காவது முறையாக ஜனாதிபதி பொறுப்பை ஏற்பார்.