tamilnadu

img

கண்களில் கண்ணீர் வந்தாலும் ‘விலைபோக மறுக்கும் வெங்காயம்...

சிவகங்கை:
மானாமதுரை பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி காரணமாக ரூ.15-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனைதெரிவிக்கிறார்கள்.  எனவே பட்டறை அமைத்து இருப்பு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தற்போது சின்ன வெங்காயத்தை பயிரிட்டு, அறுவடை செய்து வருகின்றனர்.சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் அறுவடை செய்த வெங்காயத்தை விற்பனைக்கு அனுப்பினால் பயிட்ட செலவுத் தொகையைக் கூட எடுக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது அறுவடை செய்யப்பட்டசின்ன வெங்காயத்தை மொத்தமாக அந்த பகுதியிலேயே பட்டறை அமைத்து இருப்பு வைத்து, சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்வு ஏற்பட்ட பின்னர் விற்பனைக்கு அனுப்பலாம் என விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:எனது விளைநிலத்தில் சுமார் மூன்று ஏக்கர் வரை வெங்காயம் பயிரிட்டிருந்தேன். பயிரிடுவதற்கு இடுபொருள் செலவு, ஆட்கள் கூலி என  ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை விற்பனை செய்யலாமென  நினைத்தால் கிலோ ரூ.15 வரை மட்டும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் நாங்கள் செலவு செய்த பணத்தைக் கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். சந்தையில் வெங்காயம் விலை உயரும் வரை அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை இருப்பு வைக்க பனை மர சட்டம், நாணல் புதர்கள், வைக்கோல், சோகை தட்டை ஆகியவற்றின் மூலம் பட்டறை அமைத்து,  வெங்காயத்தை இருப்பு வைக்க உள்ளோம். பட்டறை அமைக்க ரூ.15 ஆயிரம் வரை செலவாகியுள்ளது.கடந்தாண்டு விலை குறைந்த காலக்கட்டத்தில் இவ்வாறு பட்டறை அமைத்து வெங்காயத்தை இருப்பு வைத்து ஆறு மாத காலத்திற்கு பின் விலை உயர்வு ஏற்பட்டபோது விற்பனைக்கு அனுப்பினோம். கிலோ ரூ.60 வரை விற்பனையானது. இந்தாண்டும் இருப்பு வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.