tamilnadu

img

வேலைவாய்ப்பில் தமிழர்களை புறக்கணிக்கும் என்எல்சி நிறுவனம்..... கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.....

கடலூர்:
தமிழர்களை புறக்கணித்துவிட்டு வெளிமாநிலத்தவர்களுக்கு பணிவழங்கும் என்எல்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெய்வேலியில் புதனன்று (பிப்.3) செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

மத்திய அரசு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. மாநிலஅரசும் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். ஆளுநர் உரை நிகழ்ந்துள்ளது.  இரண்டிலுமே, மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிற வேலை வாய்ப்பு,  அவர்களுடைய எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.  அதற்கான ஏற்பாடுகள் இல்லை. தொழில் துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருக்கிறது. என்எல்சி நவரத்னா அந்தஸ்தை பெற்றுமிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்குகிறது. லாபம் ஈட்டக்கூடிய நிறுவனம், இதில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.  இந்த  பணியிடங்களை நிறுவனம் நிரப்புவதில்லை. மாறாக அந்த பணிகளை காண்ட்ராக்ட் விடும் மோசமான நடவடிக்கைகளில் என்எல்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கையின் விளைவாகத்தான் இதனை செய்கிறார்கள்.தற்போது என்எல்சி நிறுவனத்தில் பட்டதாரி பொறியாளர் பணி நியமனத்திற்கான தேர்வு நடைபெற்றுள்ளது.  259 பணிகளை பூர்த்தி செய்ய எழுத்து தேர்வு நடந்து, இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். கடைசியாக நேர்காணலுக்கு 1500 பேரை தேர்வு செய்துள்ளனர். இதில் 8 பேர் மட்டுமேதமிழகத்தைச் சார்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்த தேர்வு எந்த அடிப்படையில் நடைபெற்றது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

என்எல்சியின் பணிநியமனத் தேர்வில் முறைகேடு
இந்த தேர்வுகளில் மிகப்பெரிய அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால் மிகப்பெரிய அதிர்ச்சி கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கும், தமிழக பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நெய்வேலி நிறுவனம் வித்தியாசமான நிறுவனம். இந்த நிறுவனம்உருவாவதற்கான பல லட்சக்கணக் கான ஏக்கர் நிலங்களை இந்த பகுதி மக்கள் வழங்கி இருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரங்களை இழந்துநிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். இந்த பகுதியில் நிலக்கரிஇருப்பதனால்தான் நெய்வேலி நிறுவனமே இங்கு செயல்பட்டுக்கொண்டி ருக்கிறது.

நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியேற்றித்தான் நிலக்கரி எடுக்கிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மிகப்பெரிய அளவிற்கு குறைந்துள்ளது. குடிநீருக்கு கூட மக்கள் அவதிப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுகிற போது ஏன் குறிப்பிட்ட சதவீத அளவிற்கு கடலூர்மாவட்டத்திற்கு, தமிழகத்திற்கு வழங்கக்கூடாது. வேறு இடங்களில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலை என்பது வேறு, இந்த நிறுவனத்தைப் பொறுத்த வரையில் இந்தப் பகுதிமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. இதில் 1500 பேரில் வெறும் 8 பேர் தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.இதனால் மிகப் பெரிய கொந்தளிப்பு கடலூர் மாவட்டத்தில் உருவாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
இந்த பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பும். என்எல்சி நிறுவனத்தில் இந்த நடவடிக்கையை எதிர்த்து மற்றவர்களோடு இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நிறுவனம் இது குறித்துத் தெளிவான விளக்கத்தையும் அளிக்க வேண்டும். முறையான குறிப்பிட்ட அளவிற்கான சதவீத வேலை வாய்ப்பை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளித்துவிட்டு பின்னர் நேர்காணல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, நகர செயலாளர் ஆர்.பாலமுருகன்,  என்எல்சி சிஐடியு சங்க பொதுசெயலாளர் டி.ஜெயராமன், பொரு
ளாளர் சீனுவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

;