பதான் கோட், ஜுன் 10- காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப் பட்ட வழக்கில் திங்களன்று தீர்ப்பு வழங்கிய பதான்கோட் நீதி மன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. இதில் தீபக் கஜூரியா, பர்வேஷ் குமார், சஞ்ஜி ராம் ஆகிய மூவ ருக்கு ஆயுள் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரீந்தர் ஆகிய மூவருக்கு ஐந்தா ண்டு சிறை தண்டனையோடு, தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித் துள்ளது. சஞ்ஜி ராமின் மகன் விஷால் குற்றமற்றவர் என்று விடு விக்கப்பட்டுள்ளார். 2018 ஜனவரி 10 அன்று காணா மல் போன இந்த சிறுமியின் சடலம் பிறகு கண்டெடுக்கப்பட்டது. நாடோடி குஜ்ஜர் சமூகத்தைச் சேர்ந்த இந்தப் பெண் கடத்தப் பட்டு, கோயில் ஒன்றில் கட்டி வைக்கப்பட்டு, போதை மருந்து தரப்பட்டு பல நாள்களுக்கு பாலி யல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப் பட்டது.
போலீசார் இந்த வழக்கில் பாராமுகம் காட்டியதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்தன. இப்போது தண்டனைக்குள்ளாகியுள்ள கஜூரியா அப்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கில் கைது செய்யப்பட்ட வர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மார்ச் எனும் அமைப்பின் சார்பில் நடந்த ஒரு பேரணியில் அப்போது காஷ்மீரில் ஆட்சியில் இருந்த பாஜக அமைச்சர்கள் சௌதரி லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா இருவரும் கலந்துகொண்டனர். இதற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு எழுந்ததும் அவர்கள் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2018ல் எட்டு வயது முஸ்லிம் சிறுமியை கடத்தி, போதை மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை கூறியது. இதனால் ஜம்முவின் ரசனா பகுதி யிலும் மற்ற சில பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. இது சர்வதேச அளவிலும் ஊடகங்களில் செய்தியானது. இந்த சம்பவம் தொடர்பாக ஜம்மு - காஷ்மீரின் குற்றப்பிரிவு போலீசார், 18 வயதுக்குட்பட்ட நபர் உள்பட எட்டு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது, உள்ளூர் வழக்கறிஞர்கள் போராட்டம் செய்ததை அடுத்து இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டது.வழக்கு விசாரணையை பதான்கோட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
சிறுமியின் தாயார் கருத்து
இந்த தீர்ப்பு குறித்து சிறுமியின் தாய் கூறியதாவது, “இப்போதுதான் எனது மனம் நிம்மதி அடைந்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட சஞ்ஜி ராம் மற்றும் விசாரணையின்போது பாராமுகத்துடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா ஆகியோருக்கு மரண தண்டனை அளித்தால்தான் நீதி நிலைநாட்டப்படும். எனது மகளின் நினைவுகள் என்னை வாட்டுகின்றன. அவளது வயது குழந்தைகள் விளையாடுவதை பார்க்கையில் எனது மனம் கனக்கிறது” என்றார்.