சண்டிகரில் துணிப்பைக்கு பணம் வசூலித்த வழக்கில் பாட்டா நிறுவனத்திற்கு 9 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சண்டிகரைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் ரதிரி என்பவர் அங்குள்ள பாட்டா நிறுவனத்தில் காலணிகள் வாங்கியுள்ளார். அப்போது, காலணிகளை எடுத்துச் செல்வதற்கான துணிப் பைக்கும் சேர்த்து 3 ரூபாய் கூடுதலாக வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் பிரசாத் ரதிரி நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், நுகர்வோரின் வழக்கு செலவுத்தொகையாக ஆயிரம் ரூபாய், நுகர்வோருக்கு இழப்பீட்டுத் தொகையாக மூவாயிரம் ரூபாய் மற்றும் அபராத தொகையாக ஐயாயிரம் ரூபாய் என மொத்தம் ஒன்பதாயிரம் ரூபாயை பாட்டா நிறுவனம் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டது.