tamilnadu

img

செய்தியாளரை மிரட்டிய ஜக்கி வாசுதேவ்!  

செய்தியாளரை மிரட்டி, பணிசெய்ய விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்ட ஜக்கி வாசுதேவ் மற்றும் உதவியாளர்களை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.    

ஈஷா ஃபவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பிபிசி தமிழ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கையில், கோவையில் உள்ள ஈஷா மையத்தில் சுற்றுச் சூழல் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்தும், கட்டிடம் கட்டிய பிறகே அனுமதி பெறப்பட்டது குறித்தும் ஜக்கி வாசுதேவிடம் பிபிசி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.    

இதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய ஜக்கி வாசுதேவ், கேள்வி எழுப்பிய செய்தியாளரை நோக்கி கையை நீட்டி மிரட்டும் வகையில் ஒருமையில் பேசியதுடன், அவரை பொது அறிவற்றவர் என்றும் கூறியுள்ளார்.    

அந்த நேர்காணலை டிஜிட்டல் தளத்தில் பதிவேற்றியுள்ள பிபிசி தமிழ் செய்தி நிறுவனம், நேர்காணலின் இடையிலேயே ஜக்கி வாசுதேவின் ஆட்கள் கேமராக்களை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.    

அமைதியையும், அன்பையும் போதிப்பதாக கூறிக்கொள்ளும் ஜக்கி வாசுதேவ், செய்தியாளர் எழுப்பிய ஒரு நியாயமான கேள்வியை எதிர்கொள்ள முடியாமல், அவரிடம் கோபப்பட்டு, அவரை மிரட்டும் வகையில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.    

அத்துடன், ஜக்கி வாசுதேவின் உதவியாளர்கள் செய்தியாளர்களை பணிசெய்யவிடாமல் தடுக்கும் வகையில், கேமராக்களை நிறுத்தியது அராஜகத்தின் உச்சம். ஆகவே, செய்தியாளரை மிரட்டும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் நடந்துகொண்ட ஜக்கி வாசுதேவின் நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகயிலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.    

தொடர்ந்து, ஜக்கி வாசுதேவ் மற்றும் அவருடைய உதவியாளர்கள் பத்திரிகையாளர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தியுள்ளது.