tamilnadu

img

மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் கூடுதல் நிழற்குடை அமைக்க கோரிக்கை

மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் கூடுதல் நிழற்குடை அமைக்க கோரிக்கை

மதுராந்தகம், மே. 30- மழை மற்றும் வெயிலின் காரணமாக அவதிப்பட்டு வருவதால் மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் கூடுதல் நிழற்குடை அமைக்க வேண்டுமென பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பேருந்து நிலையத்திலிருந்து சூனாம்பேடு, செய்யூர், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுராந்தகம் நகரத்தில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் சேதம் அடைந்த நிலையில் இடித்து விட்டு புதிய பேருந்து நிலையத்தை கட்ட முடிவு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து மதுராந்தகம் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையத்தை இடித்து அப்புறப்படுத்தி புதியதாக பேருந்து நிலை யம் கட்டடம் கட்டுவதற்கு சுமார் ரூ.2.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் தற்காலிகமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் ஓரமாக மதுராந்தகம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது செயல்படும் பேருந்து நிலையத்தில் மேற்கூரை ஏதும் அமைக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.    கூடுதல் நிழற்குடை  தற்காலிக பேருந்து நிலையத்தில் சுமார் 50 பேர் நிற்கும் அளவிற்கு மட்டுமே நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது இதற்குள் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் ஒரு இருக்கையில் நான்கு பேர் என்ற விதத்தில் ஐந்து இருக்கைகள் அமைக்கப்பட்டு 20 பேர் மட்டுமே அமரும் வண்ணம் அவை உள்ளன.     புதிதாக பேருந்து நிலையம் கட்டி முடிப்பதற்கு இன்னும் ஓர் ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்ற நிலையில் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கழிப்பறை குடிநீர் உணவகம் மருத்துவம் பால் ஊட்டும் தாய்மார்கள் அறை என அனைத்து வசதியும்  செய்து தரப்பட வேண்டும். சுகாதாரமற்ற கழிப்பறைகள்   தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் சுகாதார மற்ற முறையில் உள்ளது கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டை போல பேருந்து நிலையம் அருகில் தேங்கி நோய் பரப்பும் வகையில் உள்ளது. மேலும் கழிவறையின் கதவுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.   இந்நிலையில் மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்கி நிற்பதற்கு கூடுதலாக நிழற்குடை அமைப்புடன் கழிவறை குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.