tamilnadu

img

முக கவசம் தயாரிக்கும் பணியில் சிறைவாசிகள் தீவிரம்

முக கவச தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கோவை மத்திய சிறையில் சிறைவாசிகள் தீவிரமாக முகக் கவசங்களை தயாரித்து வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இந்த சிறைவாசிகளின் மேம்பாட்டு நலனுக்காக மத்திய சிறை நிர்வாகத்தால் பல வகையான கைத்தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இப்படி தையல் பணி, விவசாயம், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை மேற்கொள்ளும் சிறைவாசிகள் சிறைத்துறை சந்தை மூலம் இதனை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம், சானிட்டரி போன்றவை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. இதனால் இந்த முக கவசத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இதனால் தற்போது முக கவசத்திற்கு தற்போது தட்டுப்பாடு எழுந்துள்ளது. அதே சமயத்தில் இதன் விலையை தேவையைப் பொருட்டு விற்பனையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். மிகக் குறைந்த விலையில் வைக்கப்பட்ட இந்த முக கவசம் ஆனது தற்போது 50 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது.  இதனால் இந்த முக கவசம் காவல்துறையினருக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் தேவையான அளவு கிடைக்காத நிலையும் உள்ளது.
இந்த தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் தீவிரமாக முக கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த சிறைவாசிகள் தினமும் 5 ஆயிரம் முகக் கவசங்கள் வரை தயாரிப்பதாக சிறை நிர்வாகத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து கோவை மத்திய சிறைச்சாலையின் சிறைத்துறை அதிகாரி கூறுகையில், கோவை மத்திய சிறையில் சிறைவாசிகள் தினமும் 5000 முக கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த தயாரிப்பு பணியில் ஆண் சிறைவாசிகள் 20 பேரும், பெண் சிறைவாசிகள் 5 பேரும் என ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த முக கவசமானது காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இது குறைந்தபட்ச விலையாக பத்து ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.