tamilnadu

img

கல்வி கடனுக்கு சிறப்பு லோன் மேளா நடத்திட பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தல்

கோவையில்  கல்வி கடன் வழங்க சிறப்பு லோன் மேளா நடத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. இக்குழுவின் தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். இதில், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், கோவை மாநகரட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெறும் மக்கள் நலன் சார்ந்த பணிகள் குறித்தும், அதில் உள்ள இடையூறுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. எக்காரணங்களை கொண்டும் மக்கள் நலதிட்டங்கள் தாமதப்படுத்தக்கூடாது விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளிடம் பி.ஆர்.நடராஜன் எம்பி கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த ஆண்டு கல்வி கடன், விவசாய கடன், சிறுகுறு தொழில் கடன் உள்ளிட்டவைகளுக்காக 27 ஆயிரத்து 700 கோடி ரூபாய் என நிர்ணயித்திருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் கடுமையாக பாதித்துள்ளனர். ஆகவே இம்மாவட்டத்தின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு கூடுதலான கடன் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பொருளாதார வசதியின்மையால் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. வங்கிகள் இந்த ஆண்டு கல்வி கடனை அதிகப்படுத்த வேண்டும். இதற்கான முன்னோடி வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்கிற கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் சிறப்பு லோன் மேளா ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் கல்வி கடனை விரைந்து தருவதற்குமான உத்தரவாதத்தை அளிக்கும் வகையில் லோன் மேளா இருக்க வேண்டும். இதேபோன்று கோவை மாநகரில் ஸ்மார் சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பந்தயசாலையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஸ்மார்ட் சிட்டி பணிகள் இன்னும் முடிவுறாமல் இழுத்துக்கொண்டேயிருக்கிறது. புதிதாக கோவை மாநகராட்சிக்கு பொறுப்பேற்றுள்ள ஆணையாளர் இதனை கருத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியநாயக்கன்பாளையத்தில் ஆரம்பிக்கப்பட்ட மேம்பால பணிகள் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இங்கு திட்ட சாலைகள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை, மின்துறை, குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பது தெரியவருகிறது. இத்துறைகளின் அதிகாரிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டத்தை நடத்தி மேம்பால பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்பி கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ஆட்சியர், ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆலோசனைகளை உள்வாங்கிக்கொண்டதாகவும், அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாகவும் கூட்டத்தில் உறுதியளித்தனர்.