tamilnadu

சிபிஎம் கோவை மாவட்ட செயலாளராக சி.பத்மநாபன் தேர்வு

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பேசக்கூடாது என்பதற்காகவே வார்த்தைகளுக்கு தடை விதித்திருக்கிறது மோடி அரசு. பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் ஞாயிறன்று கோவை மசக்காளிபாளையம் ஹர்சா மஹாலில் நடைபெற்றது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்ற பேரவையில் அமைப்புக்குழுவின் ஆறு மாத கால சுற்றறிக்கையை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கோவை மாவட்ட அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான ஜி.ராமகிருஷ்ணன் முன்வைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

பேரவை கூட்டத்தை துவக்கிவைத்து கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், மோடி தலைமையிலான பாஜக அரசு வரலாறு காணதா பணவீக்கத்தை, பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டினால் உலக நாடுகள் இப்படித்தான் நெருக்கடியை சந்தித்து வருவதாக தனது தோல்வியை மறைக்க அடுத்த நாட்டை அடையாளம் காட்டுகிறார்கள். பண வீக்கம் உண்மையில் 8 சதவிகிதம் என்று சொன்னாலும், உண்மையில் சில்லரை வணிகத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்கிற நிலை உள்ளது. அந்நிய செலாவணி இருப்பு படிப்படியாக குறைந்து கொண்டே போகிறது. இதுபோன்ற ஒரு நிலைதான் இலங்கையில் ஏற்பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததன் காரணமாகத்தான் அந்நாடு டாலரில் வாங்க வேண்டிய பெட்ரோலி பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.  தகடந்த மூன்று மாதங்களாக அங்கு மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற ஒரு நெருக்கடிதான் இந்திய நாடும் சந்தித்து வருகிறது. டாலர் கையிருப்பு படிப்படியாக தேய்ந்து கொண்டே இருக்கிறது. எத்தனை நாள் இந்த கையிருப்பு இருக்கும் என்பது சொல்ல முடியாத நிலை உள்ளது. மறுபுறம் வேலையின்மை 9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. விவசாயம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு பதிலாக மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்களை வெட்டிச்சுறுக்குகிறது. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை குறைக்கிறது. இலவசம் தேவையில்லை என பிரதமர் மோடி பேசுகிறார். மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள், நிவாரணங்களைக்கூட ஒன்றிய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்துகிறது. நாட்டை காப்பாற்ற முடியுமா என்கிற ஐயம் எழுந்துள்ளது. நாடு பின்னோக்கி இழுக்கிற வேலையை பாஜக அரசு செய்கிறது. ஆனால் அம்பானி, அதானி சொத்துக்களின் மதிப்புகள் மட்டும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்த நெருக்கடி குறித்து பேச அனுமதிப்பதில்லை.  ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எந்தந்த வர்த்தைகளை பேசக்கூடாது என்கிற பட்டியல் போடுகிறார்கள். இந்த பட்டியலை பார்த்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி ஆட்சியில் பாராளுமன்றத்தில் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க முடியும். நெருக்கடியில் உழலுகிற மக்களின் மனங்கள் எரிமலையாய் கொதிப்பதை அறிய முடிகிறது. இதனை திசைதிருப்பத்தான் பிரிதாலும் சூழ்ச்சிகயை திட்ட மிட்டு பாஜக ஏற்படுத்துகிறது. இதற்கான பணிகளை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். நாடு எப்போதும் மதக்கலவர சூழல் இருந்து கொண்டே இருப்பதுதான் தனக்கு ஆதாயம் என்று பாஜக நினைக்கிறது. இத்தகைய நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி  முன்மொழியும் இயக்கங்களை வெற்றிகரமாக்கிடவும், அதில் வெகுமக்கள் திரளாக பங்கேற்கவைப்பதிலும் கட்சியின் ஊழியர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும்  என்றார்.

சிபிஎம் கோவை மாவட்ட செயலாளராக சி.பத்மநாபன் தேர்வு

முன்னதாக நடைபெற்ற சிறப்பு பேரவையில் 38 பேர் கொண்ட கோவை மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக சி.பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டார். மேலும்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஏ.ராதிகா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், யு.கே.சிவஞானம், ஆர்.கோபால், வி.தெய்வேந்திரன், வி.சுரேஷ், என்.ஆர்.முருகேசன், வி.ஆர்.பழனிச்சாமி, என்.ஆறுச்சாமி  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக்குழுவின் சிறப்பு அழைப்பாளராக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாவட்டக்குழுவால் தேர்வு செய்யப்பட்டார்.