tamilnadu

img

பிரதமர் ரோடு ஷோ: கோவையில் 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு

கோவையில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பங்கேற்க மாணவர்களை அழைத்துவந்த 3 தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
கோவையில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற "ரோட் ஷோ" நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் விதி இருக்கும் நிலையில் பள்ளி சீருடையுடன் மாணவர்கள் பிரதமர் நிகழ்வில் பங்கேற்க அழைத்து வரப்பட்டதும், பள்ளி மாணவர்கள் பா.ஜ.க தொப்பியுடனும், கட்சிக்கொடியுடன் குழந்தைகளை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்த உத்தரவிட்டார்.
இதை அடுத்து சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வந்த அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கழுத்தில் பாஜக-வின் சின்னம் பதித்த துண்டு மற்றும் தொப்பியை அணிவித்து, அவர்களை பேரணியில் பங்கேற்க வைத்த வடவள்ளியில் உள்ள சின்மயா மெட்ரிக் பள்ளி, சின்மயா சி.பி.எஸ்.இ பள்ளி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா பள்ளி ஆகிய 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.