சி.எம்.ஏ (இண்டர்) தேர்வு பிரச்சினை தீர்வு இல்லாமல் தொடர்கிறது. இது குறித்து ஒன்றிய நிறுவன விவகாரங்கள் (Ministry of Corporate affairs) அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது
சி.எம்.ஏ (இண்டர்) தேர்வு விதிமுறை எண் 13 இன் படி இந்தி வழி மாணவர்கள் பிரிவு B,C, D யில் உள்ள கேள்விகளுக்கு எழுத்து அல்லது தட்டச்சு மூலம் பதில் அளிக்க முடியும். ஆனால் இந்தி வழி அல்லாத மாணவர்களுக்கு தட்டச்சு செய்யும் வாய்ப்பு மட்டுமே தரப்பட்டு இருந்தது. இது இந்தி வழி அல்லாத மாணவர்களுக்கு தேர்வில் விடை அளிக்க கூடுதல் நேரம் எடுப்பதாய் இருக்கும் என்ற மன உளைச்சலை தந்திருந்தது. இத்தகைய பாரப்ட்சத்தை களையக் கோரி ஐ.சி.ஏ.ஐ க்கு 27.12.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன் .
இந்தி வழி மற்றும் இந்தி வழி அல்லாத மாணவர்கள் மத்தியில் எந்த பாரபட்சமும் இருக்காது; இரு வழி மாணவர்களுமே பிரிவு B,C,D விடைகளை எழுத்து பூர்வமாகவோ, தட்டச்சு மூலமாகவோ தரலாம் என ஐ.சி.எம்.ஏ தலைவர் ராஜு ஐயர் எனது கடிதத்திற்கு 03.01.2022 அன்று பதில் அளித்திருந்தார். ஆனால் ஜனவரி 4, 5 -2022 தேதிகளில் நடைபெற்ற சி.எம்.ஏ (இண்டர்) தேர்வுகளில் இந்தி வழி அல்லாத மாணவர்களுக்கு எழுத்து பூர்வமாக விடை அளிக்கும் வாய்ப்பு தரப்படவில்லை. மாணவர்கள் பலர் தங்களின் ஆதங்கத்தை சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்திருந்தார்கள்.
உடனே ஜனவரி 5 - 2022 அன்று மீண்டும் ஐ.சி.ஏ.ஐ தலைவர் ராஜு ஐயர் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகளுக்கும் கள நிலைமைகளுக்கும் சம்பந்தமில்லை, உடனடியாக இந்தி வழி அல்லாத மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சம் களையப்பட வேண்டுமென்று வலியுறுத்தி கடிதம் எழுதினேன். அதற்கு இதுவரை பதில் இல்லை.
மாணவர்கள் பலர் தேர்வு குறித்து இன்னும் பல பிரச்னைகளை பரவலாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு எழுப்பி இருந்தனர். அவற்றுக்கும் ஐ.சி.ஏ.ஐ இடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆனால் இன்று (06.01.2022) ஐ.சி.ஏ.ஐ , மாணவர்கள் பொது வெளியில் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்றும், அப்படி தெரிவித்தால் 5 ஆண்டுகள் தேர்வில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மிரட்டல் ஆகும். ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கை. மாணவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு பதிலாக இவ்வாறு அச்சுறுத்துவது கண்டனத்திற்கு உரியதாகும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய பிரச்சினைக்கே, ஐ.சி.ஏ.ஐ தலைவரே விளக்கம் அளித்த பிறகும், தீர்வு கண்களுக்கு தெரியவில்லை எனில் தங்களின் கருத்துக்களை பொது வெளிக்கு கொண்டு சென்று கவனத்தை ஈர்ப்பதைத் தவிர மாணவர்களுக்கு என்ன வழி?
ஆகவே கீழ்க்காணும் கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.
1) ஐ.சி.ஏ.ஐ தேர்வு விதி முறைகளில் பாரபட்சத்தை உள்ளடக்கியுள்ள விதி எண் 13 ஐ திரும்பப் பெற வேண்டும். இந்தி வழி அல்லாத மாணவர்களுக்கும் எழுத்து பூர்வ விடை அளிக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும்.
2) ஐ.சி.ஏ.ஐ தலைவர் விளக்கம் அளித்த பின்னரும் ஜனவரி 4, 5 தேதிகளில் நடைபெற்ற தேர்வுகளில் அதை அமலாக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) பொது வெளியில் கருத்து சொன்னால் ஐந்து ஆண்டு தேர்வு விலக்கம் என்று மாணவர்களை மிரட்டுகிற ஐ.சி.ஏ.ஐ சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.
4) மாணவர்கள் தேர்வு குறித்து எழுப்பியுள்ள எல்லா பிரச்சினைகள் குறித்தும் விசாரணை ஒன்றை நடத்தி நீதி வழங்க வேண்டும்.
இக்கடிதம் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நல்ல பதிலை எதிர்பார்ப்போம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது-