tamilnadu

img

என்டிசி ஆலைகளை திறக்கக்கோரி வீடு திரும்பா போராட்டம்.... கோவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்

கோவை:
கோவையில் என்டிசி பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி என்டிசி தலைமை அலுவலகம் முன்பு  வீடு திரும்பா போராட்டத்தை அறிவித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமாக நாடு முழுவதும் 23 பஞ்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் தமிழகத்தில் கோவையில் மட்டும் 5 பஞ்சாலைகளும், கமுதகுடி, காளையார் கோவில் ஆகிய இடங்களில் தலா ஒரு பஞ்சாலை என மொத்தம் 7 பஞ்சாலைகள்  இயங்கி வருகின்றது. இந்த ஆலைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இச்சூழலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட ஆலைகள், தற்போதுவரை திறக்கப்படவில்லை. மேலும், நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டும் முழு சம்பளம் அளிக்கப்படும் நிலையில், தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின்  பஞ்சாலைகளை அனைத்தையும் முழுமையாக இயக்கி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று கோவை காட்டூரிலுள்ள தேசிய பஞ்சாலை கழக தலைமை அலுவலகத்தை அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடியுடன் முற்றுகையிட்டனர். மேலும், பஞ்சாலைகளை திறக்கும் வரை வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி, என்டிஎல்எப், ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் ஆவேசமாக அறிவித்தனர். 

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்  துறையினர் மற்றும் தேசிய பஞ்சாலை கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அக்.16 ஆம் தேதி மதுரையில் மத்திய தொழிலாளர் இணை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாகவும், அதன் பின்  ஆலைகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும், அக்.17ம் தேதிக்குள் சுமூக  உடன்பாடு ஏற்படவில்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட்டத்தில் ஏடிபி கோபால், சிஐடியு சேவியர், ஆனந்தகுமார், எச்எம்எஸ் ராஜாமணி, ஐஎன்டியுசி பாலசுந்தரம், ஏஐடியுசி ஆறுமுகம், எம்எல்எப் தியாகராஜன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.(ந.நி.)