கோவை, ஏப்.25- தமிழகம் முழுவதும் 3 மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் முழு ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக பொருட்கள் வாங்க பொது மக்கள் நெருக்கமாக கூடியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட மாநகராட்சி பகுதிகளான சென்னை , கோவை, மதுரையில் 29 ஆம் தேதி வரை 4 நாட்கள் முுழு ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. மேலும் சேலம், திருப்பூர் மாநகராட்சிகளிலும் 3 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மருத்துவம் மற்றும் அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு எந்தப் பணிகளுமே அனுமதிக்கப்பட மாட்டாது என அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் கொரொனா தொற்று வேகமாக பரவுவதையடுத்து, அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், முழு ஊடரங்கு நேரத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும். மாநகரத்தில் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ள போதும் கோவை ஆர் .எஸ். புரம் உழவர் சந்தை, தடாகம் சாலையிலுள்ள அம்மா பசுமை பண்ணை நுகர்வோர் கடை , காந்தி மாநகர், கணுவாய் உள்ளிட்ட பெரும் பகுதிகளில் மக்கள் நெருக்கமாக அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டமாக கூடியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
முன்னதாக , தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் , கொரொனா பரவும் சூழலை உருவாக்கும் விதத்திலும் பொதுமக்கள் கூடுவதை தடுக்கவே முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக பொதுமக்கள் திரண்டது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசின் புதிய அறிவிப்பால் மக்கள் மேலும் பயந்து இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். வீடுகளுக்கே பால் விநியோகம், நடமாடும் காய்கறி வாகனங்கள் வரும் என அறிவித்த போதிலும் மக்கள் இதனை புரிந்துக்கொள்ளாமல் நடந்து கொள்கின்றனர். மக்களுக்கு அதிகாரிகள் வீடு வீடாக தண்டோரா போடுவது போல் மைக்குகளில் இது தொடர்பாக தெளிவுப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றனர்.
கூடுதல் விலை
மக்கள் கூட்டத்தை பார்த்து சில வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை மிகவும் அதிக விலைக்கு விற்றனர். குறிப்பாக காலை 8 மணி அளவில் ரூ.50 முதல் 80 க்கும் விற்கப்பட்ட காய்கறிகள் 10 மணி அளவில் ரூ.150 முதல் 200 க்கு விற்கப்பட்டன.
இறைச்சிக் கடை
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் மட்டுமே முழு ஊடரங்கு என அறிவிக்கப்பட்ட போதிலும் ஊரக பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டமாக கூடி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். குறிப்பாக இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.