கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் வனப்பகுதியில் காயமடைந்து பறக்க இயலாமல் தவித்த ஆண் இருவாச்சி பறவையினை மீட்ட வனத்துறையினர் அதற்கு உரிய சிகிச்சையளித்து மீண்டும் வனப்பகுதியில் விடுவித்தனர்.
நீலகிரி மலையடிவார வனப்பகுதியான கல்லார் காட்டுப்பகுதியில் தற்போது இருவாச்சி பறவைகள் பெருமளவு தென்படுகின்றன. மழைக்காடுகளில் காணப்படும் இருவாச்சி எனப்படும் இந்த ஹார்ன்பில் பறவைகள் அழித்து வரும் பறவைகள் இன பட்டியலில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை கல்லாரில் உள்ள தூரிப்பாலம் பகுதியில் ஒரு இருவாச்சி பறவை பறக்க இயலாமல் தத்தளித்து வருவதாக அப்பகுதி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் இறகு பகுதியில் காயத்துடன் கிடந்த பறவையை மீட்டு வனத்துறை மரக்கிடங்குக்கு கொண்டு வந்தனர். பின்னர் வனத்துறை மருத்துவர்களின் ஆலோசனைப்படி பறவைக்கு டி.டி ஊசி செலுத்தியதோடு காயத்தை விரைந்து குணப்படுத்தும் மருந்துகளையும் தடவினர். சிறிது நேரத்தில் உடல் நலம் தேறிய இருவாச்சி பறவை பறக்கும் நிலைக்கு திரும்பியது. இதனையடுத்து கல்லார் மலையடிவார அடர்ந்த காட்டுப்பகுதிக்கு பறவையை எடுத்து சென்ற வனத்துறையினர் அதனை பாதுகாப்பாக விடுவித்தனர்.
மரத்தின் மீதிருந்த இருவாச்சி பறவையை அங்கிருந்த குரங்குகள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பறவைக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாகவும் உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளித்த காரணத்தால் காப்பற்றப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.