மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரை இரவோடு இரவாக தீ மூட்டி எரிக்க வேண்டிய அவசியம் தமிழக காவல் துறைக்கு எங்கிருந்து வந்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே..பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதி ஏடி காலனியில் ஏராளமான அருந்ததிய குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சக்கரவர்த்தி துகில் மாளிகை என்கிற பிரபல ஜவுளிக் கடையின் உரிமை யாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரது சொகுசு வீடு உள்ளது. வீட்டைச்சுற்றி கருங்கல் சுவர் கட்டப்பட்டிருந்தது.. இதனால் மழை பெய்தால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அருந்ததிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலேயே ஒவ்வொரு முறையும் மழைநீர் தேங்கி நின்று வந்துள்ளது. ஆகவே, இச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில்தான் கடந்த இரண்டு நாட் களாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக, ஏற்கனவே பலவீனமாக இருந்த சுற்றுச்சுவர் திங்களன்று அதிகாலை இடிந்து அருந்ததியர் குடியிருப்புகளின் மீது விழுந்தது. இதில் நான்கு வீடுகள் முற்றிலும் மண் மூடியதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்ளிட்டு 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகினர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணன்
வீட்டின் காம்பவுன்ட் சுவரை இவ்வளவு உயரமாக கட்டவேண்டிய அவசியம் இல்லை .காம்பவுன்ட் சுவர் பாதுகாப்பாக இல்லை என 2 தினங்களுக்கு முன் வீட்டின் உரிமையாளரிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உரிமையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.
இந்த சம்பவத்திற்கு வீட்டு உரிமையாளரும், அரசு அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் . இந்த பகுதியில் அடுத்தடுத்து உள்ள காம்பவுண்ட் சுவர்களையும் நீக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார், போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து ,வழக்கு போட்டிருப்பது கண்மூடித்தனமான நடவடிக்கை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்து அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார். இந்த பகுதி மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் அதிகாரிகளை நாட வேண்ட இருக்கின்றது . அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவதில்லை என்று குற்றம் சாட்டினார்
எந்த வன்முறையும் நடக்காத போது போராடியவர்கள் மீது போலிஸ் தாக்குதலை கையாண்டு இருக்க வேண்டியதில்லை. இரவோடு இரவாக உயிரிழந்தவர்களை தீ மூட்டி எரிக்க வேண்டிய அவசியம் தமிழக காவல் துறைக்கு எங்கிருந்து வந்தது எனவும், ஏன் தமிழக காவல் துறை பதட்டப்படுகின்றது என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.