tamilnadu

img

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - முதலமைச்சர் கண்டனம்!

திருப்பூரில் நியூஸ்7 செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது; இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம், பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. நேற்று வழக்கம்போல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நேசபிரபுவை, கார் மற்றும் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பின் தொடந்து நோட்டம் விட்டுள்ளனர். மேலும், அவர் குறித்து அவரது உறவினர்களிடமே விசாரித்தும் சென்றுள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் நேசபிரபுவை பின் தொடர, 4 மணி நேரத்திற்கும் மேலாக பாதுகாப்பு கேட்டு காவல்துறையினரிடம் நேசபிரபு கோரிக்கை வைத்தும், அதனை காவல்துறை அலட்சியமாக கையாண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு 9 மணியளவில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அங்கும் சிலர் இவரை நோட்டமிட்டு பின் தொடர, காவல்துறையினருக்கு வந்தவர்களின் வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களை எடுத்துக்கூறி பாதுகாப்பு கேட்டுள்ளார். காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே சுமார் 5 வாகனங்களில் வந்த கும்பல்கள் நேசபிரபுவை சுற்று வளைத்துள்ளது.
ஒரு கட்டத்தில் நேசபிரபு பதறி அடித்துக்கொண்டு அருகே இருந்த பெட்ரோல் பங்கிற்குள் ஓடியுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த நேசபிரபுவை மீட்டு பல்லடம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது; இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மருத்துவ சிகிச்சையில் உள்ள அவருக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும், சம்பவம் நடப்பதற்கு முன் செய்தியாளர் பாதுகாப்பு கோரியும், நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.