tamilnadu

img

தர்ணாவில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் கைது  

கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட  அதிமுக  அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர்.  

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடந்த ஒரு வாரமாக கோவை மாநகரில் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்தது. அதில்  பாஜகவுடன் அதிமுக இணைந்து கொண்டு மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது பிரச்சாரத்தின் முக்கிய பகுதியாக இடம் பெற்றது. இது மக்களிடம் அதிமுகவிற்கு எதிரான நிலையை உருவாக்கியிருக்கிறது. பெரும் பகுதி வார்டுகளில் அதிமுக படுதோல்வி அடையும் என அரசியல் பார்வையாளர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று காலை கோவை ஆட்சி அலுவலகம் வந்தனர். திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவில்லை எனவும அதிகாரிகள் ஒரு சார்பாக நடந்து கொள்கின்றனர் எனவும் கோஷமிட்டனர்.

இந்நிலையில் அங்கு வந்த அதிகாரிகள் போராட்டம் நடத்திய எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது உறுதியானால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.  ஆனால் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து அதிமுகவினர் சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். போராட்டம் 4 மணிநேரம் தொடர்ந்தது.  இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்த கலைந்து செல்லுமாறு கூறினர்.

ஆனால் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் அதனை ஏற்க மறுத்து கோஷங்களை எழுப்பிக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து காவல்துறையினர் போராடியவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.