கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை கோபாலபுரம் 2-வது வீதியில் வக்கீல் அலுவலகங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இங்கு வருவதற்கு கோவை கோர்ட்டில் இருந்து பின்புறம் வாயில் வழியாக வழியிருப்பதால் கோர்ட்டுக்கு வரும் பலர் இந்த பகுதியில் உள்ள டீ கடைக்கு வருவது வழக்கம். இதேபோல் இன்று காலை 11 மணியளவில் கோர்ட்டுக்கு வாய்தாவுக்கு வந்த 2 பேர் டீ குடிப்பதற்காக கோபாலபுரம் 2-வது வீதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் டீ கடையில் இருந்த வாலிபரை கத்தியால் சர மாரியாக குத்தினர்.
இதில் கழுத்து வெட்டப்பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மற்றொரு வாலிபருக்கும் தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து பேக்கரிக்கு வந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த மற்றொரு வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், கொலையுண்டது கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பதும், படுகாயம் அடைந்தவர் சிவானந்தா காலனியை சேர்ந்த மனோஜ் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ''கொலை செய்யப்பட்ட வாலிபருக்கும், படுகாயம் அடைந்தவருக்கும் சுமார் 25 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும். கோர்ட்டுக்கு வாய்தாவுக்காக வந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் பின்னரே இந்த கொலைக்கான முழு காரணம் என்ன என்பது தெரியவரும்''. என்றனர்