tamilnadu

img

கோவையில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து ரூ.20 லட்சம் கொள்ளை-7 பேர் கைது  

கோவை அருகே வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து கல்குவாரி உரிமையாளர் வீட்டில் 20 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.  

கோவை அருகே கிணத்துக்கடவு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கல்குவாரி உரிமையாளர் பஞ்சலிங்கம். இவரது வீட்டிற்கு கடந்த 15 ஆம் தேதி சொகுசு காரில் வந்த சிலர் வருமானவரி அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் இருந்த ஆவணங்கள், காசோலைகள், ஹார்ட் டிஸ்க் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.  

இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பஞ்சலிங்கம் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காரின் பதிவு எண்ணை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.  அதையடுத்து கோவை ஈச்சனாரி புறவழி சாலை பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது கல்குவாரி உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த நபர்கள் என்று கண்டுபிடித்தனர். காரில் வந்த, கோவையை சேர்ந்த பிரவீன்குமார்(36), மணிகண்டன்(37), மோகன்குமார்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்த 3 லட்ச ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  

அதனைதொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளைக்கு உடந்தையாக இருந்த சதீஷ்(36), ராமசாமி(47), ஆனந்த்(47), தியாகராஜன்(42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

;