tamilnadu

6 ஆண்டுகளில் கோவைக்கு சிபிஆர் சாதித்தது என்ன?

1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை அமுலாக்கத் துவக்கத்திலிருந்தே தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட கோவை பஞ்சாலைத் தொழில் பின்னடைவை நோக்கி நகரத் தொடங்கியது. 1995க்கு பிறகு பஞ்சாலைகள் நலிவடைவது, ஆலைகள் மூடப்படுவது என்ற இரண்டாவது கட்டத்தை நோக்கி சென்றது. குறிப்பாக 1996களில் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி கோவை பஞ்சாலைகளையும் பாதித்தது. இச்சூழலில்தான் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற 12வது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதற்கு பின்னரான 6 ஆண்டுகள் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் அவர் செய்த பணிகள்தான் என்ன? 


1998-99 சிபிஆரின் முதல் பதவிக் காலம்


1998 மார்ச்சில் எம்.பியாக பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் அடுத்த ஒன்னரை ஆண்டுகளில் கோவையின் நிலைமையினை மாற்ற என்ன செய்தார் 1999 மார்ச் 12ல் வெளிவந்த ப்ரண்ட்லைன் ஏட்டில் கோவை தொழில் பற்றிய ஆய்வுக் கட்டுரையே இதற்கான பதிலையும் தருகிறது இந்தியாவின் மொத்த ஸ்பின்னிங் மில்களில் 35 சதவீதமும், மொத்த நுல் உற்பத்தியில் 40 சதவீதமும் தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவின் மொத்த மில்களில் 13 சதவீத ஸ்பின்னிங் மில் கோவையில் உள்ளது. நாட்டின் மொத்தமுள்ள 1500 மில்களில் தமிழ்நாட்டில் 800ம். கோவையில் மட்டும் 300 மில்கள் உள்ளது. கடந்த இருபதாண்டுகளில் தமிழகத்தில் வளர்ந்து வரும் விசைத்தறி தொழிலுக்கான நூல்களை உற்பத்தி செய்வதிலும் நாட்டிற்கே முன்னுதரணமாக கோவை இருந்து வருகிறது என கோவை தொழிற்துறை சிறப்பு பற்றி அறிமுகப்படுத்துகிறது. 1996ல் துவங்கிய தெற்காசிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கோவை ஜவுளித் தொழிலும் கடுமையாக பாதித்தது. நூல் ஏற்றுமதி சரிவடைந்தது. மத்திய அரசும் (பாஜக) ஜவுளித் தொழிலை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான எந்தவொரு நிவாரண நடவடிக்கையும் எடுக்கவில்லை. அபரிமிதமான உற்பத்தி என்று சொல்லி ஜவுளித் தொழிலை கைவிட்டது. அதேபோல மத்திய அரசு அறிவித்த தொழிற்நுட்ப மேம்பாட்டுக்கான நிதியான ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு திட்டத்தில் ஜவுளி ஆலைகள் சேர்க்கப்படாது என்ற முடிவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உற்பத்தி முடக்கம். நூல் இருப்பு தேக்கம். விற்பனையில்லாத நிலைமையல் சிறிய பஞ்சாலைகள் மூடப்படுவதற்கு தள்ளப்பட்டது. இந்த பஞ்சாலைகளின் தொழில் முதலீடுகள் கரைந்து விட்டன. வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனுக்கு வட்டி கூட கட்டமுடியாத நிலைமையில் உள்ளன. தொழிற்சங்கத்தினர் கொடுத்த தகவல்படி கோவையில் சுமார் 46 பஞ்சாலைகள் இந்த இரு ஆண்டுகளில் முடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.அக்ஷயா மில்லின் நிர்வாக இயக்குநர் ஆர்.சியாம்சுந்தர் தொழில் நிலைமையினை பற்றி குறிப்பிடுகையில் 1997 அக்டோபருக்கு பிறகு 10 பெரிய மில்கள் மூடப்பட்டுவிட்டன. இதில் ஒவ்வொன்றிலும் 25 ஆயிரம் கதிர் கொள்ளளவு கொண்டவை, இந்த பெரிய ஆலை மூடல்களால் 1998ம் ஆண்டு முழுமையும் பெரிய அளவு இழப்பை சந்தித்தோம். பல மில்கள் 50 சதவீதமான உற்பத்தியை நிறுத்திவிட்டது. பணப் புழக்கமும் பாதித்துவிட்டது. இந்த நெருக்கடியிலிருந்து உடனடியாக வெளியேறுவோம் என்ற நம்பிக்கை இல்லை என்கிறார்.ஆக 1998ல் எம்பி ஆக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை ஜவுளித் தொழிலை பாதுகாக்க எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே ப்ரண்ட் லைன் கட்டுரை எடுத்துரைக்கிறது.


1999-2004 சிபிஆரின் இரண்டாவது பதவிக்காலம்


மீண்டும் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். ஐந்தாண்டுகள் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் கோவை எம்,பியாக அங்கம் வகித்த சி.பி.ராதாகிருஷ்ணன் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்த கோவை ஜவுளித் தொழில் நெருக்கடியை தீர்க்க என்ன செய்தார். 2004ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்த அதே ப்ரண்ட்லைன் ஏடு கோவை ஜவுளித் தொழில் பற்றி சிறப்புக் கட்டுரையினை வெயிட்டது. அப்போதைய நிலைமை என்ன?இப்பத்திரிகைக்கு பேட்டியளித்த லட்சுமி மில்ஸ் முதலாளி ஜி.கே.சுந்தரம் சொல்வதை கேளுங்கள். 1990களுக்கு பிறகு நெருக்கடி துவங்கி விட்டது. இன்று மேலும் மோசமாகி விட்டது. இது அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடி என்று ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டார்.மேலும் பருத்தி ஏற்றுமதி, இறக்குமதி குறித்த அரசாங்கத்தின் மதிப்பீடு மோசமானது இது ஊக வணிகத்தை வளர்த்திடவே உதவியளித்தது. மத்திய அரசு நுல் ஏற்றுமதியை அறிவித்துவிட்டு உடனே ரத்து செய்து விட்டது. இதுவும் எங்கள் தொழிலை பாதித்தது. சிறிய மில்களில் கூட சுமார் ரூபாய் 16 கோடி வரை நூல் இருப்பு உள்ளது. சாதாரணமாக ரூ.60-70 லட்சம் என்பதே அபாயகரமானது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் பல சிறு பஞ்சாலைகள் மூடப்பட்டு விட்டன. என்டிசி மில்கள் . உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டன. பஞ்சாலைககளின் துணை தொழில்களான பவுண்டரி மற்றும் இன்ஜினியரிங் தொழிலும் முடங்கிப் போயின. மத்திய அரசு வங்கிகள், தொழில் அமைப்புக்கள். ரிசர்வ் வங்கி உள்ளிட்ட கூட்டத்தினை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலைகளுக்கு கடன் அளிப்பது சம்பந்தப்பட்ட வங்கிகளின் பொறுப்பை சார்ந்தது ரிசர்வ் வங்கி தலையிட முடியாது என்று ஒதுங்கிக் கொண்டது. அப்போதைய நிலையில் வங்கிக் கடனை வாங்கி தொழிலை தொடரும் நிலையிலும் எங்கள் நிலைமை இல்லை என்கிறார் ஜி.கே.சுந்தரம்.வாஜபாய் அரசு அறிவித்த தொழிற்நுட்ப மேம்பாட்டுக்கான நிதியும் இந்த நெருக்கடியிலிருந்து மீழ்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவில்லை என்றும் தொழிற்துறையினர் ஆதங்கத்தில் இருந்தனர்.


மாறாத காட்சிகள்


1998ல் இருந்த அதே கோவை தொழிற்துறையின் தேக்க நிலைமை அடுத்த 6 ஆறு ஆண்டுகள் வரையிலும் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து நலிவைச் சந்தித்து வந்துள்ளதை மேற்படி இரு கட்டுரைகளும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பாஜக எம்.பி சி.பி.ராதாகிருஷ்ணனும், வாஜ்பாய் அரசும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அக்கறையும் எடுக்கவில்லை என்பது வரலாற்று உண்மை.


இடதுசாரிகளே நம்பிக்கையாளர்கள்


அதேநேரம், 2004ம் ஆண்டு 14வது நாடாளுமன்றத் தேர்தலிலும், 2009ல் நடந்த 15வது நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்து இடதுசாரி கட்சிகளே வெறறி பெற்றனர். இந்த 10 ஆண்டுகளில் கோவை தொழிற்துறை தனது பழைய பொழிவினை எட்டமுடியாவிட்டலும் ஓரளவு தக்கவைத்துக் கொள்ளும் நிலைமையில் இருந்தது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் சூழ்ந்தபோதிலும் அதிலிருநது தக்க வைத்துக்கொண்ட ஒரு பாதுகாப்பு ஏற்பாடு இருந்தது. இந்த 10 ஆண்டுகளில் சமூக அமைதியும் ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளது.


மீண்டும் சரிவு


16வது நாடாளுமன்றத் தேர்தலில் கோவை எம்.பியாக அதிமுகவைச் சேர்ந்தவரும். மத்தியில் மோடி அரசும் பயணித்த கடந்த 5 ஆண்டு காலம் கோவை தொழில்துறை மீண்டும் நெருக்கடியினை நோக்கி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையம். ஜிஎஸ்டியும் கடுமையாக பாதிப்புக்களை ஏற்படுத்தின. சிறுகுறு, நடுத்தர ஆலைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. மீண்டும் தொழில் மந்த நிலைமைக்கு திரும்பிவிட்டது.


அடுத்து என்ன?


ஆகவே, சமூக அமைதிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் பாதுகாப்பற்ற பாஜக - அதிமுக அணியா அல்லது தொழில் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் உறுதுணையாக நிற்கும் இடசாரிகளைக் கொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியா? என்ற நிலையில் கோவை வாக்காளர்கள் நல்ல முடிவினை எடுப்பார்கள் என்பது உறுதி.


- எஸ்.ஏ.மாணிக்கம்.




;