திருப்பூரில் அறிவியல் சோதனைகள் பயில்வு முகாம்
திருப்பூர், மே 26-தமிழ் பண்பாட்டு மையம், சுப்ரீம் மொபைல்ஸ், அரிமா சங்கம் இணைந்து நடத்திய “அறிவியல் சோதனைகள் - பயில்வு முகாம்” ஞாயிறு காலை குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் சிவக்குமார் வரவேற்றார். இந்நிகழ்வில் மதுரையை சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார் பங்கேற்று அறிவியல் சோதனைகளை செய்து விளக்கமளித்தார். இந்நிகழ்வில் நீரின் அழுத்தம், நீர் ஆக்சிஜன், ஹைட்ரஜன் பிரிதல், நீர் வெப்பமாதல் மூலம்நீரின் அடர்த்தி குறைதல், பூமி மற்றும்கோள்களின் வடிவம் குறித்து செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தண்ணீரில் மீன்கள் செவுள்கள் மூலம் எவ்வாறு சுவாசிக்கிறது, பனி வீடுகள்அரைக் கோளம், கூம்பு வடிவத்தில் அமைத்து வீட்டின் மேலே பனிக்கட்டிகள் சேராமல் தடுப்பதில் உள்ள அறிவியல் காரணம், தண்ணீர் நிலத்தில் ஆறுகள் வழியாக செல்லும் போது சிறிது சிறிதாக உப்பினை கடலுக்குக் கொண்டு செல்வதின் வாயிலாக கடல் நீர் உப்பாக மாறுவதில் உள்ள வேதியியல், பூமியை போன்றே பிற கோள்களுக்கான ஈர்ப்பு விசை மற்றும் பூமியின் மையப்பகுதியில் உள்ள புவியீர்ப்பு சுழி மையம், பூமியின் வடிவம், சுழலும் தன்மை கண்டு பிடிக்கப்பட்ட விதம் குறித்து உபகரணங்கள் வாயிலாக விளக்கமளித்து பயிற்சி வழங்கினார்.திருப்பூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற இந்த நிகழ்வினை தமிழ்ப் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் யோகி செந்தில் ஒருங்கிணைத்தார்.
திருப்பூரில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் திடீர் சாவு
விஷம் வைத்ததாக மீன் வியாபாரி மீது பொதுமக்கள் புகார்
திருப்பூர், மே 26 -திருப்பூரில் இரவு நேரத்தில் நாய் தொல்லை காரணமாக மீன் வியாபாரி ஒருவர் விஷம் வைத்து 15 நாய்களை கொன்றுவிட்டதாக பொது மக்கள் காவல் நிலையத்தில் ஞாயிறன்று புகார் அளித்துள்ளனர்.திருப்பூர் கொங்கணகிரி இரண்டாவது வீதியை சேர்ந்தவர் கோபால். இவர் மீன் பிடித்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரங்களில் இவர் மீன் பிடித்துக் கொண்டு தெருவில் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது வீடு மற்றும் தெருக்களில் உள்ள நாய்கள் இவரைப் பார்த்து குரைத்து வந்ததால் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மீன் வியாபாரி கோபால், மீன் பிடிக்க உபயோகப்படுத்தும் மருந்தை உணவில் கலந்து தெருக்களில் உள்ள நாய்களுக்கு வைத்துள்ளதாகவும், இதில் கடந்த இரண்டு நாட்களில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துவிட்டதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் கொங்கணகிரி இரண்டாம் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள்வளர்ப்பு நாய்கள் இறந்ததால், தங்கள்வீதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆதாரமாகக் காட்டி திருப்பூர் வடக்குக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.