பொள்ளாச்சி, மே 27-பொள்ளாச்சி அடுத்த சேத்துமடையில் குடிநீர் வழங்கக் கோரி மலைவாழ் மக்கள் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் வாகனத்தை சிறைபிடித்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிசேத்துமடை அண்ணா நகர். இப்பகுதியில் 1400 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் கணிசமானோர் பழங்குடியின மக்களாவர். இங்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் திங்களன்று காலை தமிழ்நாடுமலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் மற்றும் சங்கத்தின் ஆனைமலை தாலுகா பொருளாளர் செல்லம்மாள் ஆகியோர் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த கோவை மாவட்ட பேரூராட்சிகளின் இணை இயக்குநர் துவாரகநாத் சிங் வாகனத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர். வாகனத்திலிருந்து இறங்கி போராட்டக்காரர்களிடம் குறைகளைக் கேட்டறிந்த இணை இயக்குநர் துவாரகநாத் சிங் சம்பந்தப்பட்ட வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி அலுவலர்களிடம் குடிநீர் வழங்கக்கோரியும், தெருக்களில் மலைபோல் குவித்து வைக்கப்பட்ட குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தக்கோரியும் உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியிலுள்ள பொதுக் கழிப்பிடம் தண்ணீர்பற்றாக்குறையால் கடந்த 4 ஆண்டுகளாக பயன்படாமலிருப்பதையும் பொதுமக்கள் அதிகாரியிடம்முறையிட்டனர்.வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி செயல்அலுவலர் மருத்துவ விடுப்பில்உள்ளதாகவும், மாற்று செயல் அலுவலரை தற்காலிகமாக நியமித்து உடனடியாக அடிப்படைதேவைகளை நிறைவேற்றுவதாக இணை இயக்குநர் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.