tamilnadu

img

சுகாதாரமற்றுக் கிடக்கும் பழையாறு துறைமுகம்

சீர்காழி, மே 7-கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய மற்றும் சிறந்த துறைமுகமாக இருந்து வருகிறது. இத்துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். துறைமுகத்தில் பல்வேறு பணிகளில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தத் துறைமுகத்தில் சுகாதாரத்தை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. துறைமுக நுழைவுவாயிலின் முன்பகுதியில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் சிலை உள்ளது. இந்தச் சிலை அருகே குப்பைகள் குவியலாகக் கொட்டப்பட்டு சுகாதாரமின்றி காணப்படுகிறது. சீமைக் கருவேல முட்செடிகள் வளர்ந்து புதராக மண்டி கிடக்கின்றன. சிங்காரவேலர் சிலை அருகே ஊராட்சிக்குச் சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டிடம் கடந்த 20 வருடங்களாக எந்த பயனுமின்றி உள்ளது. இந்தத் துறைமுகத்தை கண்காணிக்கும் பொருட்டு மீன்பிடி துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இத்துறை ஆய்வாளரின் கட்டுப்பாட்டில் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. ஆனாலும் சுகாதாரத்தை பாதுகாக்கவில்லை. எனவே துறைமுகத்தில் குப்பைகள் மற்றும் முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடபப்ட்டுள்ளது.