tamilnadu

img

மக்கள் விரோத ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் பிரச்சாரம்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் மக்கள் விரோத ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் வாக்கு சேகரிப்பு பிரச்சார இயக்கத்தில் பேசினார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக கு.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவர் வியாழனன்று பொள்ளாச்சி நகர்புற பகுதிகளில் உள்ள 36 வார்டுகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், மக்கள் விரோத ஆட்சிகளான மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசையும், மாநில எடப்பாடி தலைமையிலான அடிமை அரசையும் வீட்டிற்கு அனுப்புவோம். அதனை உறுதிப்படுத்தும் வகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்தெடுக்கப்பட்டால், ஆனைமலையாறு- நல்லாறுத் திட்டத்தை நிறைவேற்ற முழு முயற்சியையும் மேற்கொள்வேன் என்றும் அவர் வாக்காளர்கள் மத்தியில் உறுதியளித்தார். முன்னதாக, இந்த வாக்குச் சேகரிப்பு பிரச்சார இயக்கத்தில் திமுக மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் , திமுக நகர செயலாளர் வரதராஜன், மாணிக்கராஜ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம்,  மதிமுக மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில், நகர செயலாளர் துரை பாய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ச.பிரபு, மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் முஸ்தபா, மனித நேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் முத்துபாய்,கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சியின் மாவட்ட செயலாளர் நித்தியானந்தம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் இரா.மனோகரன், ஆதித்தமிழர் பேரவை மாநிலசெயற்குழு உறுப்பினர் தி.செ.கோபால் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

;