தடைசெய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களுக்கும் அபராதம் விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி, ஜூலை 10 - வியாபாரிகளை மிரட்டும் நோக்கில் செயல்படும் பொள்ளாச்சி நகராட்சியைக் கண்டித்து செவ்வாயன்று வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பயன்படுத்த தடை விதித்து அரசாணை பிறப்பித்தது. இதையொட்டி பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள பல்வேறு கடைகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேநேரம், இந்த சோதனையின்போது தமிழக அரசால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தாலும் அதை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், நகராட்சி அதிகாரிகள் அத்துமீறி மீறி கடைக்குள் நுழைந்து வியாபாரிகளை மிரட்டும் நோக்கில் லட்சக்கணக்கில் அபராதம் விதித்து வருவதாக வணிகர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து செவ்வாயன்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் இருதய ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெள்ளகோவில் அருகே கழிவுகள் எரிக்கப்படுவது குறித்து முத்தூர் சுகாதார ஆய்வாளர் கண் துடைப்பு கள ஆய்வு?
திருப்பூர், ஜூலை 10 – திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கழிவுகள் எரிக்கப்படுவது குறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளின் எதிரொலியாக முத்தூர் பகுதி சுகாதார ஆய் வாளர் பெயரளவுக்கு கண் துடைப்பு கள ஆய்வு மேற்கொண்டதாக பொது மக்கள் கூறுகின்றனர். காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப் பாளையம் கிராமம் பாப்பம்பாளையத்தில் அரசுக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஒருசிலர் சட்ட விரோதமாக மண்ணை திருடி விற்று பணம் சம்பாதித்து வருவதாகவும், அதே நிலத்தில் பணம் பெற்றுக்கொண்டு மருத்துவக்கழிவுகள், ஆலைக்கழிவுகள் ஆகியவற்றை எரித்து சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி வருவதாகவும், கழிவுகளை எரித்த சுவடு தெரியாமல் இருக்க தண்ணீரை ஊற்றி மறைத்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் புகார் கூறப் பட்டது. இது குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பாப்பம்பாளை யத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் கழிவுகள் எரிக்கப்படுவது பற்றி வெள்ள கோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ லட்சுமி உத்தரவின்பேரில் முத்தூர் பகுதி சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் செவ் வாயன்று கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். எனினும் இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர், கழிவுகள் எரிக்கப்படுவது குறித்து சாம்பல் மாதிரிகள் எதுவும் கள ஆய்வில் சேகரிக்கவில்லை. இப் பிரச்சனை குறித்து பாப்பம்பாளையம் பொதுமக்களிடம் பரவலாக விசாரணை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் கூறு கின்றனர். எனவே, இப்பிரச்சனை தொடர் பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்து கின்றனர்.