கோபி, ஜுன் 2-கோபி அருகே 25 ஆண்டுகளுக்கு மேலாகவளர்க்கப்பட்ட மரங்களைவெட்டியதால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மரத்தை வெட்டியவர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள கோயில் வாளகத்திலும், அரசு புறம்போக்கு நிலத்திலும் இக்கிராம மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக மரங்கள் வளர்த்து வருகின்றனர். இம்மரங்களைத் தங்களது பிள்ளைகள் போல் பாதுகாத்துக் கிளைகளைக் கூட ஒடிக்காமல் பாதுகாத்து வந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளியன்றுஇருவர் மரம்வெட்டும் இயந்திரங்களைக் கொண்டு அந்த மரங்களை வெட்டியுள்ளனர். அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த மரங்களை வெட்டச் சொன்னது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு மரம் வெட்டிய நபர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சார்பில் தான் மரங்களை வெட்டச் சொன்னதாகவும், ஏனென்றால் அருகில்உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்குமின் இணைப்புக்கு ஒயர் கொண்டு செல்லமரங்கள் தடையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கு அக்கிராமத்தினர் மின் இணைப்பு ஒயர் கொண்டு செல்ல வேண்டும் என்றால் கிளைகளை மட்டும் வெட்டினால் போதுமானது. எனவே மரங்களை அடியோடு வெட்டி அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளனர். அதனால் மரம் வெட்ட வந்த நபர்கள் வெட்டிய மரத் துண்டுகளை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். மூன்று நாட்களுக்கு மேலாகியும்வெட்டப்பட்ட மரங்களை அப்புறப்படுத்தப்படவில்லை. சாலையில் கிடக்கும் மரங்களால் தொட்டிபாளையம் கிராமத்திற்குள் செல்ல முடியாமல் பொக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அனுமதியின்றி மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.