tamilnadu

திருப்பூரில் கொட்டித் தீர்த்த மழை இரவு மின்வெட்டால் மக்கள் அவதி

திருப்பூர், ஜூன் 5–திருப்பூரில் செவ்வாயன்று இரவு நீண்ட நேரம் பலத்த இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரில் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு நள்ளிரவு நீண்ட நேரம் தடை நீ்ங்காததால் பொது மக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னும் திருப்பூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில் செவ்வாயன்று மாலை கருமேகம் சூழ்ந்து வந்தது. இரவு சுமார் 8 மணியளவில் பலத்த இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த மழை நீடித்தது, இதன் பிறகு சற்று தணிந்திருந்தது. மீண்டும் இரவு பத்து மணிக்கு மேல் இடியுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் நகரில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. மழை பெய்திருந்தபோதும் வீடுகளில் காற்றோட்டம் இல்லாத நிலையில், பொது மக்கள் அவதிப்பட்டனர். மேலும் கொசுத் தொல்லையும் இருந்ததால் குழந்தைகள், முதியோர் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். நீண்ட நேரம் பெய்த மழை மகிழ்ச்சி அளித்தாலும் மின்தடை காரணமாக இரவுத் தூக்கத்தை இழந்து அவதிப்பட்டதாகத் தொழிலாளர்கள் கூறினர்.

மழையளவு

திருப்பூரில் 64 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. அதேபோல் அவிநாசியிலும் 64 மி.மீட்டர், பல்லடத்தில் 17.50, ஊத்துக்குளியில் 25.20, காங்கேயத்தில் 4 மி.மீ, திருப்பூர் தெற்கு நகரில் 51 மி.மீ என மழையளவு பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் மொத்தம் 331.10 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. சராசரி 20.69 மி.மீட்டர் ஆகும். அதேபோல் புதன்கிழமையும் திருப்பூரில் பரவலாக மழைபெய்தது. இந்த மழை கோடை குடிநீர் பஞ்சத்தை தீர்க்க உதவும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.