கோவை, மே 15– கோவையில் சிஐடியு நிர்வாகியின் ஆட்டோவை தீ வைத்து எரித்தசம்பவத்தில் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை துடியலூரை அடுத்ததொப்பம்பட்டி பிரிவில் பத்தாண்டுகளுக்கு மேலாக சிஐடியு ஆட்டோ ஸ்டேண்ட் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்குமுன்பு அந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு சில ஓட்டுநர்கள் ஒரு நம்பர் லாட்டரி விளையாட்டு என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையறிந்த சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகள் அதனை கண்டித்து அவர்களை எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் சிஐடியு ஸ்டேண்டிற்குஎதிர்புறம் அதிமுக தொழிற்சங்கத்தினருடன் இணைந்து புதிய ஸ்டேண்ட் அமைத்துள்ளனர். இதன்பின் அதிமுக ஆட்டோ சங்க நிர்வாகியான செந்தில் என்பவர் திட்டமிட்டே, சிஐடியு ஊழியர்களிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனை கண்டித்து பலமுறை துடியலூர் காவல் நிலையத்தில் சிஐடியு சங்கத்தினர் புகார்கொடுப்பதும், அவர்களை காவல்துறையினர் அழைத்து பேசி சமாதானமாக போகும்படி திருப்பி அனுப்புவதுமாக இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று ஒரு தகராறை திட்டமிட்டு உருவாக்கி சிஐடியு ஆட்டோ ஸ்டேண்ட் ஊழியர் ஒருவரின் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதுதொடர்பாகவும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அதிமுகவினர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர். இச்சூழலில் செவ்வாயன்று இரவு சிஐடியு ஆட்டோ ஸ்டேண்ட் கிளைச் செயலாளர் சுரேஷ்குமார் என்பவரின் ஆட்டோவை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதனையறிந்த சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.கே.சுகுமாரன், துணை பொதுச்செயலாளர் எம்.கே.முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதனையடுத்து துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து பி.கே.சுகுமாரன் கூறுகையில், உழைப்பை ஈட்டித் தருகிற ஆட்டோவை எரிப்பது என்பது அராஜக நடவடிக்கை. இச்செயலுக்கு சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அதிமுகவினர் திட்டமிட்டு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. ஆகவே, காவல்துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதனிடையே, சிஐடியு ஆட்டோசங்கம் சார்பில் அளித்த புகாரின்பேரில் துடியலூர் காவல்துறையினர் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களான சிவக்குமார், பிரபாகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தாங்கள் இருவரும் இணைந்து ஆட்டோவை தீ வைத்து எரித்ததை ஒப்புக் கொண்டதால், அவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.