tamilnadu

img

அமராவதி குடிநீர் வழங்கக்கோரி துணை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தாராபுரம், மே 28 -அமராவதி குடிநீர் வழங்கக்கோரி துணை ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.தாராபுரம் அடுத்துள்ள தொப்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அமராவதி குடிநீர் வழங்கக்கோரி துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் துணை ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, அமராவதி ஆற்றில் இருந்து சுண்ணாம்புகாடு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக தொப்பம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. அமராவதி ஆற்றில் புதிதாக தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து புதிய போர்வெல் போட்டு குடிநீர் விநியோகிக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 1ந் தேதியன்று  இப்பகுதியில் கருப்பு கொடி  கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் வட்டார வளர்ச்சி அலுவலர், குடிநீர் வடிகால் வாரிய உதவி கோட்ட பொறியாளர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையில், ஆட்சியர் நிதியிலிருந்துஅமராவதி ஆற்றில் தரைமட்ட நீர்த்தேக்கதொட்டி மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்து இரண்டு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது வட்டார வளர்ச்சி அலுவலரும், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளரும் இதுபற்றி பதில் கூற மறுக்கின்றனர். ஆகவே கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வரும் இக்கிராமங்களில் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட துணை ஆட்சியர் பவன்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.