நாடு முழுவதும் இந்தி திவாஸ் கொண்டாத்தை யொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி. இந்தி மொழியே இந்தியாவை ஒன்றிணைக்க உதவும்” என குறிப்பிட்டிருந்தார். அமித்ஷாவின் கருத்துக்கு நாடுமுழுவதும் இந்தி பேசாத மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரளமுதல்வர் பினராயி விஜயன் இந்தி மட்டுமே நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்ற கருத்து முற்றிலும் தவறானது. அமித் ஷாவின் கருத்தை, மொழியின் பெயரில் ஒரு புதிய போர்க்களத்தை உருவாக்குவதற்கான சங்க பரிவாரின் அறிகுறிகளாக பார்க்க வேண்டும். தெற்கு மற்றும் வடகிழக்கு மக்கள் இந்தி பேசமாட்டார்கள், அவர்களிடையே பிரிவினைவாதத்தை உண்டாக்க அமித்ஷா முயற்சிக்கின்றாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தி நம் நாட்டை ஒன்றிணைக்கிறது என்ற கூற்று அபத்தமானது. அந்த மொழி பெரும்பான்மையான இந்தியர்களின் தாய்மொழி அல்ல. அவர்கள் மீது இந்தியை சுமத்துவதற்கான நடவடிக்கை அவர்களை அடிமைப்படுத்துவதற்கு சமமாகும். மத்திய அமைச்சரின் இந்த கருத்து, இந்தி பேசாத மற்ற மொழி பேசும் மக்களின் தாய்மொழிகளுக்கு எதிரான போர்க்குரல் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியை முதன்மை மொழியாக மாற்றுவதற்கான முயற்சிகள் அவர்களின் தாய்மொழியை மறுக்கும் முயற்சியாகும்' இந்தி புரியாத காரணத்தினால் தான் இந்தியர் இல்லை என்று எந்த இந்தியரும் உணரக்கூடாது. இந்தியா பல்வேறு மொழிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு தேசிய அமைப்பைக் கொண்டுள்ளது. இதைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியிலிருந்தும் சங்க பரிவார் பின்வாங்க வேண்டும். முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை மாற்ற பயன்படும் இத்தகைய நகர்வுகளை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பதையும் அவர்கள் உணர வேண்டும், என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் கேரள ஆளுநர் ஆரிப்முகமது கான், " இந்த நாட்டின் ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்றால் இந்தியை வலுப்படுத்துவது அவசியம் " என்று அமித்ஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி உள்ளார்.