tamilnadu

img

கேரள தங்கக்கடத்தலில் பாஜக குட்டு அம்பலம்!

கேரளத்தில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தை தேசிய புலனாய்வு நிறுவனம் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில்...

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பது நாளுக்கு நாள் புலனாகி வருவதும்...
பாஜக சார்பில் துவக்கத்தில் தீவிரமாக பொது வெளியில் விவாதத்தை கிளம்பிக் கொண்டிருந்த பலரையும் காணவில்லை என்பது தான் தற்போதைய நிலையாக உள்ளது...

கேரளத்தை ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசையும் முதல்வர் தோழர். பிணராயி விஜயனையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் குற்றம் சாட்டி ஏராளமான ஆதாரமற்ற புகார்களை எதிர் கட்சியினர் திட்டமிட்டு பரப்பி வந்தார்கள்... ஊடகங்களும் தங்கள் பங்குக்கு பல்வேறு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை, அவற்றின் உண்மையற்ற தன்மை தெரிந்தே அரசுக்கு எதிராகவும் இடது முன்னணிக்கு எதிராகவும் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்...

ஆனால் தற்போது ஆதாரமின்றி கூறப்பட்ட அனைத்து புகார்களும் உண்மைக்கு புறம்பானது என்பது அம்பலமாகியுள்ளது...

தற்போது அந்த வழக்கு விசாரணை அடுத்த கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது... வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் சரீத் ஆகியோரை சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு நிறுவனம் ஆகியவை தீவிரமாக விசாரித்து வருகின்றன. குற்றவாளிகளை விசாரித்து அதன்மூலம் கிடைத்த பல்வேறு முக்கிய ஆதாரங்களால், பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான முஸ்லிம் லீக் கட்சியினர் உட்பட ஏராளமானவர்கள் வழக்கில் குற்றவாளிகளாக சிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்...

சுவப்னா சுரேஷ், முதல்வரின் உதவியாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பதவிகளை வகித்து வந்த சிவசங்கர் என்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு இந்த கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இல்லை என்று விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கர் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்பதும் மாநில அரசு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள சுவப்னா உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள்,
சிவசங்கரிடம், இது குறித்து எந்த விதமான தகவல் தொடர்பு மற்றும் உரையாடல்கள் எதுவும் நிகழ்த்தவில்லை என்றும் விசாரணையில் தேசிய புலனாய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடமும் இரு தினங்கள் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது...

ஆனால், இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள மாத்ருபூமி நாளிதழ், குதர்க்கமாகவும் நகைப்புக்குரியதாகவும் அற்பத்தனமான முறையில் செய்தியாக்கியுள்ளது... செய்தி வேறொன்றுமில்லை தேசிய புலனாய்வு நிறுவனம் சிவசங்கரிடம் விசாரணை நடத்தும் போது "அரசு முறைப் பொட்டலத்தை விடுவிப்பதற்காக நீங்கள் ஏன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவில்லை?" என்று கேட்டதற்கு "எனக்கு அது சரியென்று படவில்லை" "அவ்வாறு செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை" என்பது போன்ற பதில்களையே, இந்த கடத்தல் விவகாரம் தெரிந்தும் அதில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தார் என்ற தொனியில், துவக்கத்தில் இருந்தே பதில் கூறி வந்ததாகவும், ஆனாலும், இதில் சிவ சங்கருக்கு தொடர்பு ஏதுமில்லை என்று உறுதிப்படுத்த பட்டிருப்பதாகவும், வெளியிடப்பட்டிருக்கும் அந்த செய்தியின் இறுதியில், "சிவசங்கர் ஏன் தொலைபேசி மூலம் சுங்க இலாகாவை தொடர்பு கொண்டு அந்தப் பொட்டலத்தை விடுவிக்க வற்புறுத்தவில்லை" என்ற ரீதியில் எதிர்வரும் நாட்களில் விசாரணை நடக்கக்கூடும் என்று தனது ஏமாற்றத்தை ஆவலாக வெளிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, ஒரு கொலை வழக்கில் கொலை குற்றம் சுமத்தப்பட்டவர், கொலை செய்யவில்லை, அவருக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால்...அவர் ஏன் அந்த கொலையை செய்யவில்லை என்பதையும் குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் அந்தக் கொலையில் சம்பந்தப்படவில்லை என்றும் விசாரிக்கப்படும் என்று கூறுவது போன்ற நகைப்புக்குரிய கருத்தை செய்தியாக வெளியிட்டு ஆத்ம திருப்தி அடைந்து கொண்டது.

இந்த வழக்கில் மத்திய அரசின் தேவையற்ற தலையீடு இருப்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது....

சுங்க இலாகாவில் உதவி ஆணையராக பணியாற்றி வரும் அனீஷ் பி. ராஜன், என்ற அதிகாரியை அவசரஅவசரமாக கொச்சியிலிருந்து நாக்பூருக்கு சுங்க இலாகா இடமாற்றம் செய்துள்ளது.

ஏற்கனவே சுமார் பத்து அதிகாரிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்ய முடிவு செய்து உத்தரவு வெளியிடப்பட்டு, அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி, பின்னர் அந்த உத்தரவு முடக்கி வைக்கப்பட்டுள்ளது... தற்போது இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் அந்த பொட்டலத்தை விடுவிக்க சுங்க இலாகாவுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த ஹரி ராஜ் என்ற பாரதிய ஜனதா ஆதரவு தொழிற்சங்கமான பிஎம்எஸ் தலைவரை மீண்டும் சுங்க இலாகா விசாரணைக்கு உட்படுத்தியது... அதில் பாரதிய ஜனதா முக்கிய பிரமுகர்களின் தொடர்புகள் அம்பலமாகும் என்று அச்சம், சங்கப் பரிவார் தலைவர்களிடையே நிலவியதால் அவசர அவசரமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

அனீஷின் இந்த இடமாற்ற உத்தரவு, ஏராளமான பிழைகளுடன் அவசரகதியில் உருவாக்கப்பட்டு சரி பார்க்கப் படாமல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரவில் அந்த அதிகாரியை பெண் பாலில் குறிப்பிட்டு உத்தரவு தயாரிக்கப்பட்டிருப்பதை பலரும் கேலி செய்து வருகின்றனர்...அதுவும் இந்த வழக்கு விசாரணையின் முக்கியமான கட்டத்தில் எந்தவித தேவையும் இன்றி போர்க்கால அடிப்படையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நாக்பூரில் அவர் பணியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனிஷ் பி. ராஜன் திறமையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். பிரஸ்ஸல்ஸ் நகரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும், உலக சுங்கத்துறைகள் அமைப்பு அவரை சிறந்த அதிகாரிகளில் ஒருவர் என்று பாராட்டி கௌரவித்து, விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து கடந்த வருடம் இந்த விருதைப் பெற்ற ஒரே அதிகாரி அவர் மட்டுமே. உலக சுங்கத்துறை அமைப்பின் இந்த விருதை, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, மத்திய உதவி நிதியமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தான் அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 1400 தங்க கடத்தல்களை அவர் தலைமையில் உள்ள குழு பிடித்துள்ளது. இதுவரை 800 குற்றவாளிகளை அவர் கைது செய்துள்ளார். கடந்த வருடம் இந்தியாவில் விமான நிலையங்கள் மூலமாக கடத்தி வரப்பட்ட தங்கத்தின் அளவில் 10 சதவீதத்தை அனீஷ் தலைமையில் குழுவினரால் தான் கொச்சி விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டுள்ளது. சுங்க இலாகாவுக்கு முன் சரக்கு மற்றும் சேவை வரித் துறையில் பணியாற்றி வரும் போது குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்தவர். அவர் எங்கெல்லாம் பணியாற்றினாரோ அங்கெல்லாம் நேர்மை மற்றும் திறமையான அதிகாரி என்று பெயரெடுத்திருக்கிறார். பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்று, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தபோது 2008 ஆம் வருடம் அவர் ஐஆர்எஸ் அதிகாரியாக பதவியேற்றார். நாட்டிலுள்ள சிறந்த 10 சுங்க இலாகா அதிகாரிகளின் பட்டியலில் அவர் இடம் பிடித்துள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கு ஒரு முக்கிய கட்டத்தை எட்டும் இந்த வேளையில் அனீஷ் தற்போது இடமாற்றம் செய்யப்படுவது பல்வேறுவிதமான சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து, பொட்டலத்தை விடுவிக்கும்படி தொலைபேசி அழைப்பு வந்தது என்பதை பத்திரிகையாளர்களின் கேள்வியின் போது மறுத்து, உண்மையை வெளிப்படுத்தி பதிலளித்தார், பிஎம்எஸ் தலைவரை விசாரணைக்கு உட்படுத்தியதன் மூலம் சங்க பரிவார் தலைவர்களை சந்தேகத்தின் நிழலில் கொண்டு வந்தார் என்பது போன்ற பல விஷயங்களும் பாஜக தலைவர்களை, ஆத்திரம் கொள்ளச் செய்து, அவரை இடமாற்றம் செய்யத் தூண்டியுள்ளது.

கேரள முதல்வர் துவக்கத்திலேயே, இந்த வழக்கின் விசாரணையில், விசாரணை நடத்தும் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் எந்த ரீதியில் ஆனாலும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று உறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில் கேரள அரசு தலைமைச் செயலகத்தில் சிசிடிவி கேமரா வீடியோ பதிவுகளை தேசிய புலனாய்வு நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கிணங்க கடந்த ஒரு வருட கால வீடியோ ஆதாரங்களை கொடுக்க, கேரளா அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

கேரளா அரசும் இடது ஜனநாயக முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயனும் துவக்கத்திலிருந்தே, பாரபட்சமற்ற முறையில் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும், இந்த தங்க கடத்தல் யாருக்காக மேற்கொள்ளப்பட்டது முக்கியமான குற்றவாளிகள் யார் யார் என்பதை கண்டறிந்து வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

அதோடு தற்போது வரை இடது ஜனநாயக முன்னணி, முதலமைச்சர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த யாரும் சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணைக்கு உட்படவோ குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படவோ இல்லை என்பதை கேரளம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று நோக்கி வரும் ஒன்றாகும்...

ஆனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வலதுசாரி ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் மீண்டும் மீண்டும் கேரள அரசையும் இடது முன்னணியையும் இந்த வழக்கில் தொடர்பு படுத்தி, வழக்கைத் திசை திருப்பி உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட முயற்சி செய்து வருகிறார்கள் என்பது, விசாரணை அதிகாரிகளை இடமாற்றம் செய்து விசாரணையைச் சீர்குலையச் செய்வதன் மூலம் அம்பலமாகி வருகிறது.

#Kerala_Gold_Smuggling_Case

Sadan Thuckalai