திருவனந்தபுரம், மார்ச் 31- வெளி மாநில தொழிலா ளர்களை கேரள மக்கள் அதிதி தொழிலாளிகள் என்கிறார்கள். அதிதி என்றால் விருந்தினர். நடைமுறையில் அது உண்மைதான் என்பதை பலரும் அனுபவித்திருக்கக் கூடும். இப்போது, கோவிட் 19 பாதிப்பையொட்டி கேரளத்தில் சிக்கியிருக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு அந்த அனுபவம் கிடைத்திருக்கிறது. விருந்தினரான அதிதி தொழிலாளர்க ளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இவ்வாறு கூறினார். ‘கேரளத்தில் சுமார் 5 ஆயிரம் முகாம்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிதி தொழிலாளர்களுக்கு வசிப்பிடமும், உணவும் வழங்கும் பொறுப்பு அவர்களது ஒப்பந்ததார்களுக்கு உள்ளது. அவர்கள் வழங்கும் வசிப்பிட வசதி வேலை முடிந்த பிறகு தங்குவதற்கானது. எனவேதான் அந்த தொழிலாளர்கள் கூடுதல் வசதிகள் கொண்ட முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களுக்கு உணவு கிடைப்பத ற்காகவும் தலையீடு செய்யப்பட்டது. அவர்களுக்கு வழங்குவது கேரளிய முறையிலான உணவல்ல. அவரவர்களுக்கே உரித்தான உணவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததையொட்டி அது கிடைப்பதற்கான நடவடிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் எடுக்கப்பட்டது. தயாரித்த உணவுக்குப் பதிலாக உணவுப் பொருட்கள் போதும் என்றவர்களுக்கு அது வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து தலையீடு செய்யப்படுகிறது. ஆனாலும் அவர்களை தவறாக திசைதிருப்ப நடக்கும் முயற்சிகள் நாட்டு நலனுக்கு எதிரான நகர்வாகும் என முதல்வர் தெரிவித்தார்.
சதித் திட்டம் அம்பலமாகும்
சங்ஙனாச்சேரி பாயிப்பாடு அதிதி தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி சாலைக்கு வந்த சம்பவத்தின் பின்னணியில் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சில சக்திகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும், அத்தகைய சதித்திட்டம் தீட்டியவர்களை விசாரணை மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவர உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.