முதல் மூன்று உலகக் கோப்பையும் கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்தில் நடைபெற்றது.1987 ஆண்டு நடைபெற்ற 4-வது உலகக் கோப்பை தொடர் முதன் முறையாகக் கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஆசிய கண்டத்திற்குத் தாவியது. இந்த தொடரை இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து நடத்துவதற்கு அனுமதி பெற்றது.இது வெறும் சாதாரண அனுமதி கிடையாது.அரசியல்,ராணுவ பதற்றங்கள் நீடித்ததால் இரு நாடுகளும் இணைந்து இந்த தொடரை நடத்த முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, பாகிஸ்தான் அதிபர் ஜியா உல்-ஹக் ஆகியோரின் ஒப்புதலால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் மிகுந்த சிரமத்துடன் போட்டியை நடத்தியது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் ராஜீவ்காந்தியும்-ஜியாவும் அருகருகே அமர்ந்து ‘ஒற்றுமையை’ வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.உலகக் கோப்பை தொடரில் 60 ஓவர் கணக்கை 50 ஓவராக குறைத்தனர்.கடந்த முறை உலகக்கோப்பையை வென்றதால் பலமிக்க அணிகள் பட்டியலில் இந்திய அணியும் இடம்பிடித்தது.சொந்த மண்ணில் கோப்பையை வெல்லப் பாகிஸ்தான் அணிக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகளும் கோப்பைக்கான கியூவில் இருந்தது.ஆலன் பார்டர் தலைமையில் வந்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாவ், டீன் ஜோன்ஸ், டாம் மூடி, டேவிட் பூன் போன்ற இளம் வீரர்கள் அடங்கிய அணியை மிக மோசமான அணி என்று அந்நாட்டு ஊடகங்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடுத்தனர்.ஆனால், அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி ஆஸ்திரேலியா வீரர்கள் இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாகக் கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.