tamilnadu

img

தந்தை மறைவு நாட்டுக்காகத் தொடர்ந்து விளையாடிய இந்திய ஹாக்கி வீராங்கனை

ஜப்பான் நாட்டின் முக்கிய நகரமான ஹிரோஷிமாவில் எப்ஐஎச் என்ற பெயரில்  மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. எப்ஐஎச் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - சிலி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 22-ஆம் தேதி (சனியன்று) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் தான் டோக்கியோ ஒலிம்பிக் (2020) போட்டிக்குத் தகுதி பெற முடியும் என்பதால் இந்திய வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 19 வயது இளம் வீராங்கனையான லால்ரெம்ஸியாமியின் தந்தை லால்தன்சங்கா 21-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.  தந்தையின் மரணம் அறிந்து இடிந்துபோன லால்ரெம்ஸியாமி டோக்கியோ ஒலிம்பிக் தொடரை மனதில் வைத்து தாய்நாட்டிற்காக கனத்த மனதோடு அரையிறுதியில் தொடர்ந்து விளையாடினார். அரையிறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில்  சிலியைப் புரட்டி எடுத்த இந்திய அணி, இறுதி ப்போட்டியில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், செவ்வாயன்று தாய் நாடு திரும்பிய லால்ரெம்ஸியாமி மிசோரமில் உள்ள தனது கிராமத்துக்குச் சென்றதும் தாயைக் கட்டி அணைத்துக் கொண்டு கதறி அழுதார்.தந்தை இறந்த துக்கத்தைத் தாங்கி நாட்டுக்காகத் தொடர்ந்து விளையாடிய லால்ரெம்ஸியாமிக்கு விளையாட்டு நிபுணர்கள் உட்பட பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.