கிரிக்கெட் உலகின் யார்கர் மன்னனும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் லசித் மலிங்கா வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்துடன் (கொழும்பு - ஜூலை 26) ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் என இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 335 விக்கெட்டுகளுடன் 10-ஆவது இடத்தில் மலிங்கா உள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (335) வீழ்த்திய 3-வது இலங்கை வீரர் என்ற சாதனை சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள மலிங்கா ஓய்வு தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதால் ஓய்வு முடிவு வங்கதேச தொடர் தொடங்கும் முன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.