இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் இடையே இரட்டைத் தலைமை, பிசிசிஐ-இன் கட்டுப்பாடுகள் (உலகக் கோப்பையின் போது) தொடர்பாகக் கருத்து வேறுபாடு இருந்தது. பொது வெளியில் இந்த விவகாரம் கசியவில்லை என்றாலும் ரோஹித் சர்மா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமின் அன்ஃபாலோ (UNFOLLOW) வசதி மூலம் பிரச்சனைக்கு விதை வைக்க தற்போது கோலி, ரோஹித் ஆகியோரின் மனைவிகள் தண்ணீர் ஊற்றி தழைய விட்டுள்ளனர். பிரச்சனை பெரிதாக முளைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஏஓ) வினோத் ராய், “இது வெறும் வதந்திதான் வேறொன்றும் இல்லை” என கூறியுள்ளார். வினோத் ராயின் கருத்து ஆறுதல் அளித்தாலும் இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ கவலையடைந்த நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.