இலங்கை வீரர்கள் பாக்., செல்ல மறுத்த விவகாரம்
இலங்கை கிரிக்கெட் அணி வரும் 27-ஆம் தேதி 3 ஒருநாள், 3 டி-20 என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கப் பாகிஸ்தான் செல்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. பாஸ்கிதான் மண்ணில் 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த தீவிரவாதிகள் தாக்குதலைக் கருத்தில் கொண்டு கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன்கள் மேத்யூஸ், சன்டிமால் மற்றும் திசாரா பெரேரா உள்ளிட்ட 10 வீரர்கள், “பாகிஸ்தான் மண்ணில் விளையாட எங்களுக்கு விருப்பமில்லை” என அறிவித்தனர்.
இலங்கை வீரர்களின் இந்த முடிவுக்கு இந்திய அரசு தான் காரணம் எனப் பாகிஸ்தான் நாட்டின் தொழில் நுட்ப அமைச்சர் பவத் உசேன் சவுத்ரி டுவிட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டினார். பவத் உசேன் கருத்தை ஏற்க மறுத்த இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,”இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்த விவகாரத்திற்கும் இந்திய அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தை மனதில் வைத்துத் தான் இலங்கை வீரர்கள் தனிப்பட்ட முடிவை எடுத்துள்ளனர்” எனப் பதிலடி கொடுத்தார். இலங்கை அமைச்சரின் பதிலடியால் இந்த விவகாரம் மூச்சுப் பேச்சு இல்லாமல் உயிரற்று கிடந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி இலங்கை வீரர்களின் முடிவுக்கு ஐபிஎல் தொடர் தான் காரணம் எனக் குற்றம்சாட்டி தண்ணீர் ஊற்றி அணைத்த பிரச்சனையை பெட்ரோல் ஊற்றி மீண்டும் புகையை விட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பாகிஸ்தான் பீரிமியர் லீக் தொடரில் இலங்கை வீரர்கள் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், பாகிஸ்தான் சென்றால் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதே போல இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் வர மறுப்பதற்கு ஐபிஎல் தொடர் தான் முக்கிய காரணம். இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்றால் அவர்களுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட ஒப்பந்தம் அளிக்கப்படாது என்று ஐபிஎல் நிர்வாகம் மீண்டும் எச்சரித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாடுவதற்காக இலங்கை வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தொடர் அழுத்தம் தர வேண்டும். தற்போதைய சிக்கலான சூழலில் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும் இலங்கை வீரர்கள் வரலாற்றில் நினைவுகூரப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார். பாகிஸ்தான் செல்ல மறுப்பது இலங்கை வீரர்களின் சொந்த பிரச்சனை. ஆனால் இந்த பிரச்சனைக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் அமைச்சர், முன்னாள் கேப்டன் அப்ரிடி ஆகியோர் ஆதாரமின்றி அடுத்தடுத்து குற்றம் சாட்டிவருவதால் பிசிசிஐ, ஐசிசியிடம் விரைவில் புகார் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை
பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்குத் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இலங்கை அணி திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.