tamilnadu

img

கொரோனா பற்றிய அச்சத்தை போக்க வெளிப்படைதன்மை தேவை: சிபிஎம்

காஞ்சிபுரம்:
கொரோனா பாதிப்புகள் பற்றி உண்மைத் தகவல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும். வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டு மக்களின் அச்சத்தை போக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.இதுதொடர்பாக கட்சியின் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று பரவலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை நிர்வாகம் குறைத்துக் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.இந்த மாவட்டத்தில் 8க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மாநில அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் 4 பேர் என்றும், மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் 7 பேர் என்றும் முரண்பாடான தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசின் தனிமைப்படுத்துதல் நடவடிக்கை முன்புபோல் இல்லாமல், கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலஊழியர்கள் 2 பேருக்கு தொற்று ஏற்பட்டுள் ளது. ஆனால், இதை மாவட்ட நிர்வாகம் மூடிமறைக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தி, பரவலாக பரிசோதனை செய்ய வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிப்புகள் பற்றிய முழு விவரங்களையும் வெளியிட்டு, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;