உளுந்தூர்பேட்டை, ஜூன் 23- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தானியங்களை விற்பனை செய்த விவசாயிகளுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் வழங்காமல் அலை கழிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இங்கு முகவராக செயல்பட்ட மணிமாறன் சுமார் 25 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், கம்பு, உளுந்து, மக்காச்சோளம், எள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் விற்பனை செய்த விவசாயிகளுக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இங்கு விவசாயிகளி டமிருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பெறப்படும் விளைபொருட்களை மணிமாறன் என்ற ஒப்பந்ததாரர் தரகு பணி மூலம் பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை வழங்கவில்லை. பணத்தை பெற்றுத் தரவேண்டிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகமும் இதுகுறித்து கவலைப்படவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி தலைமறைவான ஒப்பந்ததாரர் மணிமாறனை தேடி வருகின்றனர். தங்களுக்கு சேர வேண்டிய 25 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.