சிஐடியு-வின் அகில இந்தியப் பொதுக்குழு
“நாங்கள் தொழிலாளிகள்.
தொழிலாளிகளாகிய நாங்கள்தான்
இந்தத் தேசத்தைக் கட்டி எழுப்பினோம்.
இந்தத் தேசத்தை
இப்போதும் பாதுகாக்கிறோம்.
எப்போதும் பாதுகாப்வோம்.”
இது, 2019 ஆகஸ்ட் 7-10 தேதிகளில் கர்நாடகாவில் ஹாசனில் நடைபெற்ற சிஐடியு-வின் அகில இந்தியப் பொதுக்குழுவில் முழங்கப்பட்ட முழக்கமாகும். பொதுக் குழு தன்னுடன் இணைந்துள்ள அனைத்து சங்கங்களுக்கும், குழுக்களுக்கும் இம்முழக்கத்தை நன்கு விளம்பரம் செய்து சுதந்திர தினத்திற்கு முதல்நாளிரவு முழுவதும் நடைபெற்ற கலை-இலக்கிய-இசை நிகழ்ச்சியின்போது முழங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தது.
அந்த சமயத்தில் அங்கே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிச் சுதந்திரம் பெற்ற என் முன்னோர்கள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான போராட்டத்தைத் தொடர்வதற்கு சபதம் எடுத்துக் கொண்டார்கள்.
சிஐடியு-வின் அகில இந்தியப் பொதுக்குழு, இப்போது நம்முன் உள்ள உடனடிக் கடமை, மோடி 2 அரசாங்கம் நாட்டின் அனைத்து முனைகளிலும் கட்டவிழ்த்துவிட்டுள்ள தொழிலாளர் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டங்களை மேற்கொண்டு, அரசின் படுபிற்போக்குக் கொள்கைகளைத் திரும்பப் பெற நிர்ப்பந்தம் அளிப்பதாகும் என்று வலியுறுத்தி இருக்கிறது.
இப்போதுள்ள நிலைமையானது, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசாங்கம் பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், மதவெறி பிளவுவாத நிகழ்ச்சிநிரலுக்கு எதிராகவும், பாஜக அரசாங்கத்தின் தொழிலாளர்களை ஒடுக்குகிற, எதேச்சாதிகார மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் சுயேச்சையாகவும், பிற அமைப்புகளுடன் கூட்டாகவும் இணைந்து இயக்கங்களைக் கட்டி எழுப்பிட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது.
பொதுக் கவுன்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஹாசனில் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. எனினும் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையினால் பொதுக் கவுன்சில் உறுப்பினர்களின் போராட்ட உணர்வுத் தீயை அணைத்திட முடியவில்லை, மேலும் கூட்டத்தை செம்மையாக நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுவந்த தொண்டர்களின் உற்சாகத்தையும் குறைத்திட முடியவில்லை.
சிஐடியு-வின் அகில இந்திய பொதுக்குழு 2019 செப்டம்பர் 5 அன்று அகில இந்திய விவசாய சங்கத்தால் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஒருமைப்பாட்டை விரிவாக்கிக் கொள்வதுடன் அதில் முழுமையாகப் பங்கேற்பது என்றும் தீர்மானித்தது. எந்ந அளவிற்கு சாத்தியமோ அந்த அளவிற்கு தொழிலாளர்-விவசாயிகளின் கூட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு தொழிலாளர்களை அணிதிரட்டிட ஆவன அனைத்தையும் சிஐடியு-வின் அனைத்துக் குழுக்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
ராணுவ உற்பத்திப் பிரிவுகளை, கார்ப்பரேட்மயமாக்கிட மோடி-2 அரசாங்கம் முடிவு எடுத்திருப்பதற்கு எதிராக வரும் ஆகஸ்ட் 20-இலிருந்து 30 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட பாதுகாப்புத்துறை ஊழியர்கள் தீர்மானித்திருப்பதனைப் பொதுக்குழு வரவேற்றுள்ளது. பாதுகாப்புத்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை விரிவாக்கிக் கொள்வதுடன், பாதுகாப்புத்துறையின் உற்பத்திப் பிரிவுகள் உள்ள இடங்களில், அதிலும் குறிப்பாகத் துப்பாக்கித் தொழிற்சாலை உள்ள இடங்களில், இருக்கின்ற சிஐடியு-வின் பிரிவுகள் அனைத்தும் பொதுத்துறையைக் கைகழுவவும், அந்நியக் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக நம் நாட்டின் உற்பத்திப் பிரிவுகள் அனைத்தையும் அழித்திடவும், அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் நடத்திடும் போராட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் பொதுக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது.
மேலும், உருக்கு, ரயில்வே, பிஎஸ்என்எல் மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனங்களை நம் நாட்டிலுள்ள மற்றும் அந்நிய நாடுகளில் உள்ள தனியார் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்திட அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நின்றிடவும் பொதுக்குழு தீர்மானித்தது.
ரயில்வேயில் இயங்கிவரும் உற்பத்திப் பிரிவுகளைக் கார்ப்பரேட் மயமாக்கிடவும், பெரிய மார்க்கங்களில் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கும் 100 நாள் திட்டம் வகுத்திருக்கிற அரசாங்கத்திற்கு எதிராக ரயில்வே ஊழியர்கள் சங்கங்கள் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களும் அணிதிரண்டு வருகின்றன. இதற்கு ஆதரவாக சிறப்பு மாநாடுகள் நடத்திடத் பொதுக் குழு தீர்மானித்திருக்கிறது. மேலும் அரசாங்கத்தின் இத்திட்டம் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்திவரும் சாமானிய மக்களுக்கு ஏற்படுத்திடவிருக்கும் நாச விளைவுகள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்றும் பொதுக்குழு தீர்மானித்தது. ரயில் நிலையங்களின்முன்பு ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்படும்.
மோடி அரசாங்கம், ‘வர்த்தகம் செய்வதை எளிமைப்படுத்துவது’ என்ற பெயரில், தொழிலாளர் நலச் சட்டங்களைத் தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றிடவும், அந்நிய முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்தல் போன்ற “சீர்திருத்தங்களிலும்” இறங்கியிருக்கிறது. இவற்றைக் கணக்கில்கொண்டு, பொதுக்குழு, அரசின் இந்நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் நாசகர விளைவுகளை மக்கள் மத்தியில் விரிவான அளவில் பிரச்சாரம் செய்திட நாடு முழுதும் உள்ள தொழிலாளர்களைத் தயார்ப்படுத்தும் பணியில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளது. இவ்வாறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு, பொருத்தமான சமயத்தில் வேலைநிறுத்தம் உட்பட கூட்டுப் போராட்டங்களை உக்கிரப்படுத்திடத் தொழிலாளர் வர்க்கத்தைத் தயார்ப்படுத்திடவும் பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
சிஐடியு-வின் அகில இந்திய பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆகஸ்டு 6 அன்று பெங்களூருவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பணியிடங்களில் பாலியல் தொல்லை கொடுத்தல் தடைச் சட்டம் மீது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து சிறப்பு மாநாடு நடத்திட வேண்டும் என்றும், உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அம்சங்கள் குறித்து தேசியக் கருத்தரங்கம் நடத்திட வேண்டும் என்றும் எடுத்திருக்கிற முடிவுகளுக்கும் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், உழைக்கும் பெண்களின் பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு மாதங்கள் பிரச்சாரங்கள் மேற்கொண்டபின் நிறைவாக 2020 மார்ச் 8 அன்று நாடு முழுதும் ‘சிறை நிரப்பும்’ நடத்திடவும் திட்டமிட்டிருக்கிற அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் முன்மொழிவிற்கும் பொதுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றின் விவரங்கள் சிஐடியு-வின் 16ஆவது மாநாட்டின்போது இறுதிப்படுத்தப்படும். சிஐடியு-வின் பொன் விழா நடைபெறக்கூடிய சமயத்தில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு கோடி பெண்களை உறுப்பினர்களாகச் சேர்த்திட வேண்டும் என்கிற தீர்மானித்தின் ஒரு பகுதியாக, பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கிட அனைத்து மாநிலக் குழுக்களுக்கும் பொதுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
பொதுக்குழுவில் 22 மாநிலங்களிலிருந்தும் வந்துள்ள சங்க நிர்வாகிகளுடன் 355 உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். இவர்களில் 44 பேர் பெண்கள். சங்கத்தின் கொடியை தலைவர் ஹேமலதா ஏற்றினார். வரவேற்புக்குழுவின் கௌரவ செயலாளர் விஜய குமார் வரவேற்புரையாற்றினார். அரசமைப்புச்சட்டத்தின் அமைப்புகளின் மீதான எதேச்சாதிகாரத் தாக்குதல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கூட்டாட்சித் தத்துவம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மற்றும் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் ஆகிய பாஜக அரசாங்கத்தின் எதேச்சாதிகாரத் தாக்குதல்களுக்கு எதிராக மூன்று தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை பொதுச் செயலாளர் தபன்சென், துணைத் தலைவர் ஏ.கே. பத்மனாபன் மற்றும் செயலாளர் ஏ.ஆர்.சிந்து முன்மொழிந்தனர். மேலும் கர்நாடகம், கேரளம், மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்தும் அவற்றுக்கு தொழிலாளர் வர்க்கம் சாத்தியமான உதவிகளை அளித்திட வேண்டும் என்று கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை சிஐடியு-வின் துணைத் தலைவர்களான ஜி. சுகுமாறன் மற்றும் எஸ். வரலட்சுமி முன்மொழிந்தனர். அனைத்துத் தீர்மானங்களும் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேறின. சிஐடியு-வின் பொருளாளர் எம்.எல். மல்கோடிய இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தலைமையுரை
தலைமையுரை ஆற்றுகையில் ஹேமலதா கூறியதாவது: நாட்டில் தற்போதுள்ள நிலைமை மிகவும் அசாதாரணமானதாகும். மோடி அரசாங்கம், நவீன தாராளமயக் கொள்கைகளை மிகவும் மூர்க்கத்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுதுமே தொழிலாளர் வர்க்கம் மாற்றத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்துடன் உறுதியுடன் தொடர்பினை வைத்துக்கொண்டிருக்கின்ற இடதுசாரிகள் வலுப்பெற்று வருகின்றனர். எங்கேயெல்லாம் அவை ஊசலாடுகின்றனவோ அங்கேயெல்லாம் வலதுசாரி சக்திகள் தலைதூக்கி இருக்கின்றன.
இந்தியாவில் பாஜகவின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத பாஜகவிற்கு எதிராக கூட்டுத் தொழிற்சங்க இயக்கம் விடுத்த அறைகூவலுக்கு தொழிலாளர்களின் ஆதரவு கிடைத்திடவில்லை. எனவே இதுவரை நாம் போய்ச்சேராத தொழிலாளர்களிடமும் எப்படிப் போய்ச்சேருவது என்று நாம் ஆராய வேண்டும். பாஜகவின் அரசியலை அவர்களிடம் அம்பலப்படுத்திட வேண்டும். மேலும் நம் வேலைமுறையையும் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஹேமலதா தன் தலைமையுரையில் கூறினார்.
தபன்சென்
பொதுச் செயலாளர் தபன் சென் கூறியதாவது: மத்திய அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பட்ஜெட், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்திருக்கும் முறை, ஊதியங்கள் தொடர்பான சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளமை, மோட்டார் வாகன திருத்தச் சட்டமுன்வடிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டமுன்வடிவு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் என அனைத்துமே மோடி-2 அரசாங்கம் எந்த அளவிற்கு மிகவும் மூர்க்கத்தனமாக சென்றுகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. மக்கள் மீது எதேச்சாதிகாரம் மற்றும் பாசிஸ்ட் தாக்குதல்களைத் தொடுப்பதற்காகவே இவ்வாறு இச்சட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த சமயத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் முன் உள்ள ஒரே வழி, நாம் நம் போராட்டங்களை சுயேச்சையாகவும் கூட்டாகவும் முன்னெடுத்துச் செல்வதேயாகும். இதில் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தையும் இதர உழைக்கும் மக்கள் பிரிவினரையும் இணைத்திட வேண்டும்.
உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் ஆளும் பாஜக பாசிஸ்ட் அரசாங்கம் மிகவும் ஆபத்தானதாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனை முறியடித்திட, நாம் நடத்தவிருக்கிற சிஐடியு பொன்விழா நிகழ்ச்சிகளையும், நாட்டின் முதல் மத்தியத் தொழிற்சங்கமான ஏஐடியுசி-இன் முதல் நூறாண்டுக் கொண்டாட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்முன் உள்ள சவால்களை எதிர்த்து முறியடித்திடக்கூடிய விதத்தில் சிஐடியு-வை வீரஞ்செறிந்த போராட்டக்குணம் மிகுந்த, வலுவானதொரு, தொழிலாளர் அமைப்பாக வளர்த்தெடுத்திட வேண்டும். சிஐடியு-வின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்திட வேண்டும்.
கண்டனம்
ஜம்மு-காஷ்மீர் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா ஆகியோர் விமான நிலையத்திலேயே தடுத்துநிறுத்தப்பட்டதற்கு பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவித்தது.
பொதுக்குழுவில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அப்போது அவர் எடுத்துரைத்தார்.
பொதுக்குழுக் கூட்டத்தில் முதன்முறையாக விவாதங்கள் அனைத்தும் வங்கமொழி, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரேசமயத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும். உறுப்பினர்கள் இதனை மனநிறைவுடன் வரவேற்றனர். சென்னையில் நடைபெறவிருக்கும் மாநாட்டின்போது இது தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் தபன்சென் தொகுப்புரைக்குப்பின் பொதுச் செயலாளர் அறிக்கையும், பொருளாளர் மல்கோடியா முன்வைத்த வரவுசெலவுக் கணக்கும் ஒருமனதாக நிறைவேறின.
2020 ஜனவரி 23-27 தேதிகளில் சென்னையில் சிஐடியு-வின் 16ஆவது மாநாட்டை நடத்துவதற்காக தபன்சென் சமர்ப்பித்த முன்மொழிவும் ஒருமனதாக ஏற்கப்பட்டது. மாநாடு நடைபெறும் இடத்திற்கு ‘முகமது அமின் நகர்’ என பெயரிடப்பட்டுள்ளது. மாநாட்டு மேடை மற்றும் பிரதிநிதிகள் அமரும் அரங்கிற்கு ‘சுகுமால்சென் அரங்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, 1923ஆம் ஆண்டு மே 1 அன்று இந்தியாவின் முதல் மேதினத்தைக் கொண்டாடிய சிங்காரவேலர் பெயர் இடப்பட்டுள்ளது.
பொதுக்குழுவிற்கு வந்திருந்த உறுப்பினர்கள் நிறைவுநாள் அன்று எடுத்துக்கொண்ட சபதம் பின்வருமாறு:
நான் கனவு காணும் இந்தியாவில், கரத்தால் உழைக்கின்ற தொழிலாளர்களும், கருத்தால் உழைக்கின்ற தொழிலாளர்களும் சமமான முறையில் அங்கீகரிக்கப்படவும், மதிக்கப்படவும், ஏற்றுக்கொள்ளப்படவும், சபதம் ஏற்கிறேன்.
இந்தியாவில், வேலை செய்யும் உரிமை, வாழ்வதற்கான உரிமை, உயிருடன் இருப்பதற்கான உரிமை – ஆகியவை அடிப்படை உரிமைகளாக உத்தரவாதப்படுத்திட, சபதம் ஏற்கிறேன்.
இந்தியாவில், பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் அரசியல் இறையாண்மை ஆகியவற்றில் எவ்விதமான சமரசமும் செய்துகொள்வதற்கோ, எவருக்கும் சரண் செய்வதற்கோ அனுமதிக்க மாட்டேன் என்று சபதம் ஏற்கிறேன்.
ஆண்கள் – பெண்கள் அனைவரும் சமத்துவத்துடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்று சபதம் ஏற்கிறேன்.
இந்திய மக்கள் – வேலை குறித்தோ, உணவு குறித்தோ, வீட்டுவசதி குறித்தோ, உடல்நலம் குறித்தோ மற்றும் கல்வி குறித்தோ, எவ்விதமான சங்கடமுமின்றி அமைதியுடனும், திருப்தியுடனும் வாழ்வதற்கு இட்டுச்செல்லக்கூடிய சமுதாயத்தை அமைத்திட, சபதம் ஏற்கிறேன்.
நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முழுமையான அளவில் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், உடலை வளர்த்துக் கொள்வதற்கும் போதிய வாய்ப்புகள் ஏற்படுத்தித்தர, சபதம் ஏற்கிறேன்.
மக்கள் அனைவரும் அன்புடனும், நட்புடனும், நல்லிணக்கத்துடனும் பரஸ்பரம் மரியாதையுடனும் வாழ்வதற்கு வழி வகுத்திட, சபதம் ஏற்கிறேன்.
சாதியோ, இனமோ, மதமோ அல்லது பாலினமோ மக்களைப் பிரித்திடாததொரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு சபதம் ஏற்கிறேன்.
நம் முன்னோர்கள் கனவு கண்ட இந்தியாவை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்காக போராடிய லட்சோபலட்சம் தொழிலாளர்கள் கனவு கண்ட இந்தியாவை, வளமான இந்தியாவை, கட்டி எழுப்பும் வரைக்கும், ஓயமாட்டேன், என் போராட்டங்களைத் தொடர்வேன் என்று சபதம் ஏற்கிறேன்.
(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 18-8-19)
(தமிழில்: ச.வீரமணி)
Attachments area