போலிச் சான்றிதழ் புகார்: 22 ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
கரூர், அக்.21- கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் கண்ணன்(46). இவர், கரூர் அருகே உள்ள பெரியவடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் 1997-ம் ஆண்டு ஆசிரியராக பணிக்கு சேரும் போது, போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக எழுந்த புகாரின் பேரில் விசாரனை நடைபெற்றது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணையம் சார்பில் கரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவின் பேரில், வருவாய் துறையினர், கல்வி துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆசிரியர் கண்ணன் போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது உறுதி படுத்தப்பட்டது. இதனையடுத்து கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன் நடவடிக்கை மேற்கொண்டார். 22 ஆண்டுகளுக்கு முன்பு போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது கல்வித் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி
கரூர், அக்.21- கரூர் மாவட்டம் ஏமூர் காலனியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி உஷா. இவர்களின் மூத்த மகள் வைஷ்ணவி(9). அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
இவர், கடந்த வாரம் தொடர் காய்ச்சலால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அச்சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காதது தான் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி கரூர் பாலம்மாபுரத்தில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.