tamilnadu

img

இரண்டே மாதத்தில் பத்தாயிரம் பேர் ‘தமிழி’ பயிற்சி பெற்றனர்

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் பள்ளி மாணவர்க ளுக்கு தமிழ் பிராமி கல்வெட்டு எழுத்து(தமிழி) பயிற்சி திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்க தேசிய ஒருங்கிணைப்பாளரும், தமிழி பயிற்சியாளருமான முனைவர் ராமசுப்பிரமணி யம் தலைமையில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  பயிற்சி வகுப்பை வாசகர் வட்ட தலைவர் கோபால தேசிகர் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ராமசுப்பிரமணியம், குளித்தலை பகுதி மாணவ- மாணவிகளுக்கு தமிழி எழுத்துப் பயிற்சி வழங்கினார். அப்போது, தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவமான ‘தமிழி’ எழுத்துக்களை இளைய தலைமுறையினர் ஒரு லட்சம் பேருக்கு நிகழாண்டில் கொண்டு சேர்க்கும் நோக்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழி பயிற்சி பட்டறைகள் நடத்தி வரும் நிலையில், தற்போது இரண்டே மாதங்களில் 10,000 பேருக்கு பயிற்சியை நிறைவு செய்துள்ளோம் என்றார்.  மேலும் தமிழி எழுத்து வடிவில் 25 திருக்குறள்களை எழுதி குளித்தலை கிளை நூலகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் வழங்கினால் அவர்களுக்கு பரிசு மற்றும் தமிழி கற்றுக் கொண்டதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.  பின்னர் நூலகத்தில் போட்டித் தேர்வு இளைஞர்களுடன் தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குளித்தலை கிளை நூலகர் ஆனந்த கணேசன், நூலக பணியாளர்கள் போதும்பொண்ணு, அகிலன், வாசகர் வட்ட நிர்வாகிகள் முருகா னந்தம், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.