கடலூர், டிச. 7- கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அடைக்கப்பட்ட பாதையை மீண்டும் ரயில்வே நிர்வாகம் திறந்துவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் ரயில் நிலையம் அருகே அரசு குழந்தை பேறு மருத்துவமனை உள்ளது. இதை ஆயிரக்கணக்கான சுற்றுவட்டார மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அங்கு ரயில்வே சுரங்கப் பாதை அமைத்ததினால் மருத்துவமனைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. மருத்துவமனைக்கு அவசர ஊர்தி, நோயாளிகள் செல்ல உரிய பாதையை ஏற்படுத்தித்தர வேண்டும், திருப்பாபுலியூர் ரயில் நிலையத்தை, கடலூர் திருப்பாபுலியூர் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும், இந்த வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், கடலூர் - பாண்டி - சென்னை இருப்புப்பாதை திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும், விழுப்புரம் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - விழுப்புரம் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பான்பரி மார்க்கெட்டிற்கு காய்கறி எடுத்து செல்லும் பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு நகரக் குழு உறுப்பினர் வி.திருமுருகன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.சுப்புராயன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆளவந்தார், நகர் குழு உறுப்பினர்கள் கே.ஸ்டாலின், என்.பால்கி, ஆர்.ஆனந்த், அருள், எஸ். கருணாகரன் , எம்.பழனி, எஸ். ஏ.பக்கிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.