tamilnadu

img

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் முயற்சி

தஞ்சாவூர், மே 22-செங்கிப்பட்டி அருகே விவசாயநிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் முயற்சி நடந்தது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகையிட்டு அதை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி அருகே திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், அயோத்திபட்டி-அய்யாசாமிபட்டி இடையே விவசாய நிலங்களில் குழாய்பதித்து எரிவாயு கொண்டு செல்லும்பணிக்காக, ஏராளமான குழாய்கள், செவ்வாய்க்கிழமை இரவு லாரிகள்மூலம் கொண்டு வந்து இறக்கப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடுவிவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், அகில இந்தியவிவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச்செயலாளர் சி.பாஸ்கர், மற்றும் நிர்வாகிலகள் தமிழரசன், மருதமுத்து, வியாகுலதாஸ், பாலசுப்பிரமணியன், சுபாஷ்சந்திரபோஸ், தங்கமணி, தங்கவேலு, மாதர் சங்க நிர்வாகிகள் மலர்கொடி, வாலிபர் சங்க நிர்வாகிகள் கரிகாலன், தமிழ்செல்வன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

“தண்ணீரை உறிஞ்சுறியா... விவசாயிகள் ரத்தத்தை உறிஞ்சுறியா... ஒஎன்ஜிசியே.... வேதாந்தா நிறுவனமே வெளியேறு... ஹைட்ரோ கார்பன், ஷேல்கேஸ் திட்டம், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் முயற்சியை அரசே கைவிடு” என முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குழாய்களை இறக்கவந்த லாரியையும் திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், வருவாய் துறை அலுவலர்கள் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், “இறக்கி வைக்கப்பட்டுள்ள குழாய்களை அப்புறப் படுத்த ஏற்பாடு செய்வதாக” தெரிவித்தனர். “இரண்டு நாட்களில் அப்புறப்படுத்தப்படவில்லை என்றால், விவசாயிகளே அப்புறப்படுத்துவோம்” என்றனர். இதையடுத்து ஒரு மணி நேரம்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் கூறுகையில், “விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இத்திட்டம் அமல்படுத்தப்பட மாட்டாதுஎன உறுதி அளித்தார். ஆனால் அவரதுபெயரில் ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி அரசு பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பை மீறி நாசகர திட்டங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில், 11 வட்டங்களில் 75 கிராமங்களில், திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி, தஞ்சையில் அய்யாசாமிப்பட்டி, மருதக்குடி, முத்தாண்டிபட்டி, புதுப் பட்டி, கொட்டரப்பட்டி, நவலூர் வழியாக திருச்சி மாவட்டம் வாழவந் தான்கோட்டை வரை, விவசாய நிலங்களின் கீழே எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் போன்ற திட்டங்கள், விவசாயிகள் எதிர்ப்பால் கடந்த 2012-13-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இப்போது மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. 

பொதுமக்கள், விவசாய சங்கங் கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒத்தகருத்துடைய அமைப்புகள் இணைந்துஅரசின் இத்திட்டத்தை முறியடிப் போம். விவசாய நிலங்களை மலடாக்கும், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் இத்திட்டத்தை கைவிட வேண்டும்” என்றார். விவசாயிகள் போராட்டம் காரணமாக வல்லம் காவல்துறை ஆய்வாளர் நடராஜன் தலைமையில், காவல்துறை உதவி ஆய்வாளர் பாலமுருகன், செங்கிப்பட்டி காவல்துறை உதவிஆய்வாளர் அருண்ராஜ் மற்றும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக் காக குவிக்கப்பட்டனர். மத்திய, மாநிலஅரசுகளின் மக்கள் விரோத திட்டம் காரணமாக டெல்டா பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.