சென்னை, செப்.23- சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் ஆஸ்திரேலியா விலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் நீதி மன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படும் இந்த நடராஜர் சிலை, நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து 1982 ஆம் ஆண்டு திருடப்பட்டது. இந்த சிலையை 37 ஆண்டுகளுக்குப் பின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையிலான காவலர்கள் மீட்டு சென்னைக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிலையானது திங்கட்கிழமை (செப்.23) சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சிலை குறித்து பல்வேறு தகவல்களைக் கேட்ட நீதிபதி, மீண்டும் அதனை ஏ.டி.எஸ்.பி. ராஜாராமிடம் ஒப்படைத்தார். செவ்வாய்க்கிழமை(செப்.24) காலை 7 மணிக்கு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கோவில் நிர்வாகத்திடம் சிலையை ஒப்படைக்க உள்ளார். 37 ஆண்டுகளுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் மீட்கப்பட்ட நடராஜர் சிலை செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்களின் வழிபாட்டிற்கு வைக்கப்பட உள்ளது.