tamilnadu

img

ஆபாச கருத்துக்களை பதிவிடுபவர்களை கண்டறிய சிறப்பு பிரிவு அமைத்திடுக!

டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஜன.30- சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய, 2  மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சில கருத்து களை பதிவிட்டதால் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கேட்டு அவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி அமர்வில் ஏற்கெனவே  விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக வலைதளங்களில் ஆபாச, அவதூறு கருத்து களை தெரிவிப்பவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பளிக்கப் பட்டது. நீதிபதி வழங்கிய தீர்ப்பில், சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்தவொரு முறையான நடைமுறையும் இல்லை. 

இத்தகைய போக்குகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால், தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது.  சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல்நிலையங்க ளிலும் 2  மாதத்திற்குள் சிறப்புப் பிரிவை  அமைக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டது.  இதற்கான நிபுணத்துவத்தை சிறப்புப் பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும்  நீதிபதி உத்தரவிட்டார்.  தன்னுடைய பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் மருதாசலத்துக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 

;