மதுரை, ஆக.10- சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 56. சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஐவர் முதலில் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது சுற்றாக மேலும் ஐந்து பேர் கைதாகினர். அதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரையும் ஒருவர். சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உடல்நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். கடந்த ஜூலை 24-ஆம் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவந்தது. ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்தார். பால்துரை மரணத்தை, மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா உறுதி செய்துள்ளார்.
மனைவி புகார்
இரண்டு நாட்களுக்கு முன்னதாக சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரையின் மனைவி மங்கையர் திலகம் மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், எந்தத் தவறும் செய்யாத தனது கணவர் பழிவாங்கப்படுவதாகக் கூறியிருந்தார். நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த எனது கணவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது என்று புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தொலைபேசி மூலமாக தகவல் அளித்த பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் மற்றும் அவரது மகள் ஆகியோர் பேசியபோது, எனது தந்தைக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என கூறினால் மட்டுமே உடலை பெறுவோம் என பால்துரையின் மகள் கூறினார். தனது கணவரின் உயிரிழப்பிற்கு சாத்தான்குளம் காவல்நிலைய பெண் எழுத்தர் பியூலா, காவலர் சேவியர் மற்றும் தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிஸ் ஆகியோர் தான் எனவும், என் கணவர் கடைசியாக உயிரிழக்கும் முன் இருவருக்கு எப்படியாவது தண்டனை வாங்கி கொடுங்கள் எனவும் கூறிவிட்டு இறந்ததாக தெரிவித்தார்.