tamilnadu

img

சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் முறை ஒரு மாதம் ஒத்திவைப்பு

சென்னை,டிச.15- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு, சாலை பராமரிப்பு மற்றும் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பலகோடிரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதனை குறைப்பதற்காக டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள 526 சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக இருந்த நிலையில் டேக் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாஸ் டேக் சிப்புகள் சந்தையில் கிடைப்பதில் தட்டுப்பாடு நீடிப்பதால் இத்திட்டத்தை மேலும் ஒருமாத காலம் ஒத்தி வைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. பாஸ்டேக் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிறுவனமும் அரசிடம் மேலும் 6 வார கால அவகாசம் கோரியுள்ளது. இதனையடுத்து பாஸ்டேக் பொருத்த வாகன உரிமையாளர்களுக்கு மேலும் ஒருமாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டம் ஜனவரி 15 ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனிடையே பாஸ்ட்டேக் முறையின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படுவது கடந்த ஜூலை மாதத்தை காட்டிலும், நவம்பர் மாதத்தில் அதிகரித்திருப்பதாக நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ. 8.8 லட்சம் பாஸ்ட் டேக் முறை பரிவர்த்தனை நடைபெற்ற நிலையில், நவம்பர் மாதத்தில் பாஸ்டேக் பரிவர்த்தனைகளின் அளவு 11.2 லட்சமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் நாள்தோறும் வசூலாகும் தொகையின் அளவும், 11.2 கோடியிலிருந்து 19.5 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த பாஸ்ட் டேக் முறை மூலம், தற்போது ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் நாட்டின் சுங்கக் கட்டண வருவாய், 1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 1.4 லட்சம் கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகளில், தற்போது 24 ஆயிரத்து 996 கிலோ மீட்டர் சாலைகள் சுங்க வரிவரம்புக்குள் வருகின்றன. நடப்பாண்டு இறுதிக்குள் 27 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் சுங்க வரி வரம்புக்குள் வரும் எனவும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி 

புதுச்சேரி மொரட்டாண்டி சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்களில், 20 முதல் 25 சதவீத வாகனங்கள் மட்டுமே பாஸ்டேக் முறைக்கு மாறியிருப்பதால், வழக்கமான முறையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீட்டிக்கப்பட்டிருக்கும் அவகாசத்தை பயன்படுத்தி வாகன ஓட்டிகள் பாஸ்டேக் முறைக்கு மாறவேண்டும் என சுங்கசாவடி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் 

சேலம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் பாஸ்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் 4 வழிகளிலும், பொருத்தப்படாத வாகனங்கள் 2 வழிகளிலும் அனுமதிக்கப்பட்டன. பெரும்பாலான வாகனங்கள் பாஸ்டேக் பொருத்தப்படாததால் 2 வழிகளில் மட்டுமே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனிடையே சுங்கச்சாவடியில் பாஸ்டேக் பதிவு செய்வதற்கான சிறப்பு மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை

மதுரை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடிக்கு பாஸ்டேக் சிப் பொருத்த வந்த வாகன ஓட்டிகள், சிப் இருப்பு இல்லாததால் திரும்பிச் சென்றனர்.