பாஜகவின் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் சார்பில் வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், வேல் யாத்திரை சம்பந்தமாக முழு அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி, டிஜிபி தரப்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட பாஜகவினர் முககவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்றவில்லை.
பாஜகவினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை.
நீதிமன்றத்தில் பாஜக சொல்வது ஒன்று. செய்வது ஒன்று
10 வாகனங்களில் 30 பேர் செல்வதாக பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. என்று டிஜிபி தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாகவும், எதிர்க்கட்சியினரும் கூட்டங்களை கூட்டுகின்றனர் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து, பாஜகவின் வேல் யாத்திரையால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை ஊடகங்களில் பார்த்தோம். தவறான செயலை நியாயப்படுத்தாதீர்கள் என பாஜக தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து வழக்கை மதியத்திற்கு ஒத்திவைத்தனர்.
மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? என்றும், அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்..
வேல் ஒரு ஆயுதம், ஆயுத சட்டப்படி அது தடை செய்யப்பட்டது எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், பாஜகவின் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் தமிழக அரசுத் தரப்பில், நவம்பர் 30 வரை யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.இந்நிலையில், இவ்வழக்கை டிசம்பர் 2ஆம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.